மருத்துவக் கல்வியை சீர்குலைக்கும் தி.மு.க அரசு

தமிழகத்தில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்தாகும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ள தி.மு.க அரசிற்கு பா.ஜ.க, அ.தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட பல கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒருபுறம், மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரிகளைத் தந்து, தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை நனவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளும்போது, மறுபுறம், திறனற்ற தி.மு.க அரசு, தனது மெத்தனப் போக்கினால், 500 மருத்துவக் கல்வி இடங்களை இழக்கும் அபாயத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது.ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் வருகை பதிவேடு போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளாததால், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் மருத்துவ சேர்க்கை நிறுத்தப்படும் என்று மருத்துவக் கல்விக் குழு (UGMEB) கல்லூரி முதல்வர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளது. உடனடியாகத் தமிழக அரசு தலையிட்டு, இந்த மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்திற்கான உட்கட்டமைப்பு வசதிகளைத் துரிதமாக மேற்கொண்டு, வரும் ஆண்டுகளின் மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்றும், தமிழக அரசு செய்ய வேண்டிய பணிகளைச் சரிவரச் செய்யாமல் தட்டிக் கழித்து விட்டு, பிறர் மேல் பழி போடும் வழக்கமான பல்லவியைப் பாட வேண்டாம் என்றும் தமிழக பா.ஜ.க சார்பாக வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.