விழுப்புரத்தில் இரு சமூக மக்கள் பிரச்சனை

விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலுக்குள் பல ஆண்டுகளாக பட்டியல் சமூக மக்கள் அனுமதிக்கப்படாத சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் கோயில் திருவிழாவின் போது இளைஞர் சிலர் கோயிலுக்குள் சென்றதால் கடுமையாக தாக்கப்பட்டனர். இதனால், பட்டியல் சமூக மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ள வளவனூர் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இது நடந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. பட்டியல் சமூக மக்களை கோயிலுக்கு அழைத்து செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை எனக்கூறி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்பாட்டத்தின்போது மக்களிடம் பேசிய தமிழக அமைச்சர் பொன்முடி, பட்டியல் சமூக மக்கள் கோயிலுக்கு செல்வதை தடுப்பவர்கள் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுப்படும் என கூறினார். பொன்முடியின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பட்டியல் சமூக மக்களை கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தியும் நேற்று மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயில் முன்பாக மற்றொரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர். அவர்களின் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை வீசி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் விழுப்புரம் வருவாய் கோட்டாச்சியர் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டு இருந்தபோது திடீர் என மூவர் உடலின் மீது மண்ணென்னையை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் தடுத்து அவர்களை மீட்டு சென்றனர். இதைத்தொடர்ந்து மேல்பாதி கிராமத்தில் பதட்டமான சூழல் நிலவியாதால் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.