தமிழகம் முழுவதும் பா.ஜ.க ஆர்ப்பாட்டம்

கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு காரணமாக தி.மு.கவை கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ஜ.கவின் மாநில மகளிர் அணி சார்பில் வருவாய் மாவட்டங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அந்தந்த மாவட்ட மகளிர் அணி தலைவி தலைமையேற்பார்கள். சென்னை துறைமுகம் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தமிழகத்தில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும் கள்ளச் சாராய விற்பனையையும் அவற்றால் ஏற்பட்ட துயர் மரணங்களையும் தடுக்கத் தவறிய திறனற்ற தி.மு.க அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பா.ஜ.க சார்பில் வரும் 20ம் தேதி மாபெரும் கண்டன போராட்டத்தை நடத்தவிருக்கிறோம். இந்த கண்டன போராட்டத்தை மகளிர் அணியினர் முன்நின்று நடத்துவார்கள். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்பேன்” என்று தெரிவித்துள்ளார்.