ரயில்வே வேலை வாய்ப்பு ஊழல்

பீகார் முன்னாள் முதல்வரும் லாலு பிரசாத் மனைவியுமான ராப்ரி தேவி, ரயில்வே வேலை வாய்ப்புக்கு முறைகேடாக நிலம் பெற்ற  வழக்கில் அமலாக்க இயக்குநரகம் முன்பாக விசாரணைக்கு ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்தார். இதற்கு முன், ராப்ரி தேவியிடம், கடந்த மார்ச் மாதம் மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ) பாட்னாவில் உள்ள அவரது இல்லத்தில் விசாரணை நடத்தியது. மேலும், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் அவரது சகோதரியும் எம்.பியுமான மிசா பார்தி ஆகியோரிடம் விசாரணை நடத்தியது. நில மோசடி தொடர்பாக ஆர்.ஜே.டி ராஜ்யசபா எம்பி பிரேம் சந்த் குப்தா, அக்கட்சி எம்.எல்.ஏ கிரண் தேவி மற்றும் அவரது கணவர் அருண் யாதவ் ஆகியோருக்கு சொந்தமான ஒன்பது இடங்களில் மே 16ம் தேதி சி.பி.ஐ சோதனை நடத்தியது நினைவு கூரத்தக்கது.