மத்திய அமைச்சரவை ஒப்புதல்கள்

சுகாதார ஆராய்ச்சித் துறை உலக சுகாதார அமைப்பு ஒப்பந்தம்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை, சுகாதார ஆராய்ச்சித் துறை மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம், ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் உயர்தர தொழில்நுட்பம் குறைந்த செலவில் கிடைப்பதை ஊக்குவுக்கிறது. இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் உலக சுகாதார அமைப்பும் சுகாதார ஆராய்ச்சித் துறையும் அக்டோபர் 2022ல் கையொப்பமிட்டன. இந்த ஒத்துழைப்பு, தொழில்நுட்பத்தை அணுகுவதில் சர்வதேச கவனத்தை ஈர்ப்பது, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை அதிகரிப்பது மற்றும் பொருத்தமான பயிற்சி திட்டங்களை உருவாக்குதல் மற்றும் பரப்புதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

போட்டி ஆணையங்களுக்கு இடையே ஒப்பந்தம்: பிரதமர்நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்தியப் போட்டி ஆணையம் (சி.சி.ஐ) மற்றும் எகிப்திய போட்டி ஆணையம் (இ.சி.ஏ) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்த இரு போட்டி ஆணையங்களுக்கு  இடையேயான தொடர்பை மேம்படுத்துவதையும், அனுபவப் பகிர்வு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மூலம் ஒருவருக்கொருவர் தங்களது அனுபவங்களைக் கற்றுக்கொள்வதையும், பின்பற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு தரப்பும் மற்ற தரப்பினரின் அணுகுமுறை உள்ளிட்டவற்றை கற்றுக்கொள்ள உதவுகிறது. இது நுகர்வோருக்கு பெருமளவில் பயனளிக்கும். போட்டிச் சட்டம் 2002, பிரிவு 18 ஆனது, இந்தியப் போட்டி ஆணையம் தனது கடமைகளை நிறைவேற்றும் நோக்கத்திற்காக, எந்தவொரு வெளிநாட்டுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள அனுமதிக்கிறது. அதன்படி மேற்கூறிய ஒப்பந்தம் கையெழுத்தானது.

பாரதம் மாலத்தீவு ஒப்பந்தம்: பாரதத்தின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்திற்கும், மாலத்தீவு பட்டயக் கணக்காளர்களுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மாலத்தீவிலும், பாரதத்திலும் கணக்காளர் தொழிலில் பரஸ்பர ஒத்துழைப்பை நிறுவுவதற்கும், தொழில்முறை மற்றும் அறிவார்ந்த வளர்ச்சிக்கும் உதவுவதும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். இதன் மூலன் இரு நாடுகளின் திறன் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் உதவிபுரிவதோடு தங்களின் தொழில்முறையை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பையும் வழங்கும். இரு நாடுகளுக்கு இடையேயான வலுவான பணி உறவுகளை மேம்படுத்தும். உலகளாவிய கணக்காளர் தொழிலை மேம்படுத்துவதற்கும், கணக்காளர்களின் மேம்பாடு குறித்து அண்மைக் கால தகவல்களை வழங்கவும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.

ஐ.டி துறைக்கான பி.எல்.ஐ திட்டம்: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ.17,000 கோடி மதிப்பிலான தகவல் தொழில்நுட்ப வன்பொருள் நிறுவனங்களுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம் 2.0’வுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. பாரதத்திம் மின்னணுப் பொருட்கள் உற்பத்தி கடந்த 8 ஆண்டுகளில் 17 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 105 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 9 லட்சம் கோடி) அளவிற்கு மேல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. உலகில் அலைபேசி உற்பத்தியில் பாரதம் இரண்டாவது மிகப்பெரிய நாடாக உள்ளது. நடப்பு ஆண்டு 11 பில்லியன்  அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 90 ஆயிரம் கோடி) மதிப்பிலான அலைபேசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச மின்னணுப்  பொருட்கள் உற்பத்திச் சூழல் பாரதத்தை நோக்கி வருவதையடுத்து, பாரதம் மிகப்பெரிய மின்னணுப் பொருட்கள் உற்பத்தி நாடாக உருவெடுத்து வருகிறது.  இத்திட்டம் ஆறு ஆண்டுகளுக்கு  வரையறுக்கப்பட்டது. 3.35 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தியை அதிகரிக்கும் என்றும், 2430 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு அதிகரிக்கும் என்றும், 75,000 நேரடி வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஊட்டச்சத்து அடிப்படையில் மானியம்: பாஸ்பேட் மற்றும் பொட்டாசிய உரங்களுக்கு ரபிப் பருவம், 2022 மற்றும் 2023 (01.11.2023 முதல் 31.03.2023 வரை)க்கான ஊட்டச்சத்து அடிப்படையில் மானியத்தை திருத்தியமைக்கவும் காரீஃப் பருவம், 2023 ( 01.04.2023 முதல் 30.09.2023 வரை)க்கான ஊட்டச்சத்து அடிப்படையில் மானியத்தை நிர்ணயிக்கவும், உரங்கள் துறையின் ஆலோசனைக்கு பிரதமர் மோடி தலைமையில்நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு மானிய விலையில் 25 கிரேடு பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரம் கிடைக்கச் செய்வதற்கு இந்த ஒப்புதல் பயன்படும். விவசாயிகளுக்கு மானிய விலையில் தரமான பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரம் கிடைக்கச் செய்வது என்ற அரசின் உறுதிமொழியை நிறைவேற்ற காரீஃப் 2023க்கு அரசு ரூ. 38,000 கோடி மானியம் வழங்கும். காரீஃப் பருவத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் குறைந்த செலவில், நியாயமான விலையில் டி.ஏ.பி மற்றும் இதர பொட்டாசியம் மற்றும் பாஸ்பேட் உரங்கள்  கிடைப்பதை அமைச்சரவை முடிவு உறுதி செய்யும்.