ஆளுநரிடம் மனு அளிக்க அ.தி.மு.க முடிவு

அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், தமிழகத்தில் நிலவும் கள்ளச்சாராய விவகாரம், அரசியலில் மிகப்பெரிய புயலை கிளப்பிய பி.டி.ஆர் ஆடியோ விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், கள்ள சாராய மரணங்கள் மற்றும் பி.டி.ஆர் ஆடியோ விவகாரம் குறித்து விசாரிக்க வலியுறுத்தி பேரணியாக சென்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் மனு அளிக்க அ.தி.மு.க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அ.தி.மு.க வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நாள்முதல் தமிழகத்தில் பல்வேறு முறைகேடுகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். தி.மு.க ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் 22ம் தேதி காலை 10.25 மணிக்கு, சென்னை, சின்னமலை, தாலுகா அலுவலகம் சாலை, ஏசு கிறிஸ்து சபை அருகில் இருந்து, பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணியாகப் புறப்பட்டு, ஆளுநர் மாளிகை சென்றடைந்து, முக்கிய கழக நிர்வாகிகள் ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளார்கள்.” என்று கூறப்பட்டுள்ளது.