பாரத உணவை புகழ்ந்த எலான் மஸ்க்

பாரத உணவு வகைகள் பல்வேறு வகையான மனதை மயக்கும் சுவைகள், நறுமணங்கள், ஆரோக்கியம், வண்ணங்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அதன் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. உலகமே ஒரு பெரிய கிராமமாக மாறுவதால், பல்வேறு நாடுகளை சேர்ந்த அதிகமான மக்கள் பாரத உணவுகளின் தீவிர ரசிகர்களாக மாறி வருகின்றனர். அவ்வகையில், தற்போது, பாரத உணவு பிரியர்களின் பட்டியலில் உலகக் கோடீஸ்வரரான எலான் மஸ்க்கும் இணைந்துள்ளார். கடந்த 5 வருடங்களாக அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் மாநில வாரியாக சுவை அடிப்படையில் ஹோட்டல்கள் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த செவ்வாயன்று, டுவிட்டர் பயனர் டேனியல் என்பவர் தனது டுவிட்டர் பதிவில், பாரத உணவு மிகவும் பிடித்துள்ளது, அற்புதமாக உள்ளது என தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க் அவரது கருத்தை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு ”உண்மை” என்று எழுதினார். டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியின் இந்த ஒற்றை வார்த்தை பதில், பாரதத்தினரையும் பாரத உணவு பிரியர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா? சர்வதேச அரங்கில் பாரத உணவைப் பாராட்டியதற்காக பலர் அவருக்கு நன்றி தெரிவித்தனர். சிலர் அவரை பாரதம் வந்து உண்மையான பாரத உணவு வகைகளை முயற்சிக்குமாறு அழைப்பு விடுத்தனர். அவர் இந்த பதிலை பதிவிட்ட மூன்று மணி நேரத்திற்குள்ளாகவே, அது 1.7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. 21,400 லைக்குகள் மற்றும் 1,206 ரீடுவீட்களைப் பெற்றுள்ளது.

சில டுவிட்டர் பயனர்கள், ”நீங்களே முயற்சி செய்து பாருங்கள், நீங்கள் ஒவ்வொரு நாளும் சில வித்தியாசமான உணவுகளை முயற்சி செய்யலாம். ஆயிரக்கணக்கான உணவு வகைகள் உள்ளன. தயவு செய்து பாரதத்தின் உண்மையான ருசிக்காக பாரதம் விஜயம் செய்ய திட்டமிடுங்கள். ‘நீங்கள் எப்போது பாரதம் வருகை தருவீர்கள்? இங்கு 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் பல்வேறு வகையான உண்மையான உணவுகளை முயற்சி செய்யுங்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு வகையான கலாச்சாரங்கள், வெவ்வேறு உணவுகள், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு மக்கள் ஆகியவற்றை நீங்கள் அனுபவிக்க முடியும். தற்பெருமைக்காக அல்ல, உண்மையிலேயே பாரத உணவு வகைகள் உலகில் மிகவும் மாறுபட்டது” என எழுதினர்.