உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க வெற்றி

உத்தரப் பிரதேச மாநிலத்தின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 4 மற்றும் 11ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்தது. 17 மாநகராட்சி, 199 நகராட்சி மற்றும் 52 நகர பஞ்சாயத்துக்களுக்கு தேர்தல் நடந்தது. இந்த மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று உள்ளது. மொத்தம் 17 மேயர் தொகுதிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.மாநகராட்சிகள் தவிர 90 பேரூராட்சி தலைவர் பதவிகள் மற்றும் 600க்கும் மேற்பட்ட வார்டுகளில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது.கடந்த 2017ல் பா.ஜ.க 60 இடங்களை வென்ற நிலையில், தற்போதைய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இரு மடங்கு இடங்களை வென்றுள்ளது. குறிப்பாக கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க தோல்வியடைந்த மீரட் மற்றும் அலிகார் ஆகிய இடங்களிலும் பா.ஜ.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.இந்த ஆண்டு முதல் முறையாக தேர்தல் நடந்த ஷாஜஹான் பூரின் முதல் மேயராக பாஜகவின் அர்ச்சனா வர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.பா.ஜ.கவால் நிறுத்தப்பட்ட 17 மேயர் வேட்பாளர்களில் 14 பேர் புதியவர்கள். பா.ஜ.க வேட்பாளர்கள் 4 பேர் இரண்டாவது முறையாக மேயர் ஆனார்கள். இந்த வெற்றி குறித்து முதல்வர் யோகி பேசுகையில், “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் எங்களுக்கு வாய்ப்பளித்த வாக்காளர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்காக உ.பி அரசு தொடர்ந்து உழைக்கும்” என்று தெரிவித்தார்.