உலக சிக்கல்களின் தீர்வாக பாரதம்

உலக நாடுகள் பலவும் சிக்கல்களுக்கான தீர்வுக்கான நாடு என பாரதத்தை எதிபார்ப்புடன் பார்ப்பதாக கோவை அமிர்தா பலகலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக சிவில் 20 சமித் (சி20) என்ற தலைப்பில் கோவை எட்டிமடை பகுதியில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தில் தொழில் நுட்பம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குத்து விளக்கேற்றி கருத்தரங்கினை துவக்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த உலகம் பல சவால்களை சந்தித்து வரும் வேளையில் குளோபல் கிளைமேட் போன்ற பல்வேறு சிக்கல்கள் உள்ளன. கண்ணுக்கு தெரிந்த மற்றும் தெரியாத பல போர்களால் இந்த உலகம் போராடி வருகிறது.அறிவியல், தொழில்நுட்பம் மேலும் வளர்ச்சி பெற வேண்டும். அறிவியலும், தொழில்நுட்பமும் மருத்துவர் மற்றும் குற்றவாளி ஆகிய இருவர் கையிலும் இருக்கும் கத்தி போன்றது. அதனை ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

உலகம் பல வித கருத்துக்களால் பிரிந்து கிடக்கும் சூழலில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது தான் இப்போதைய தேவை. உலக நாடுகள் பலவும் சிக்கல்களுக்கான தீர்வுக்கான நாடு என பாரதத்தை எதிர்பார்ப்புடன் பார்க்கிறது.கொரோனாவுக்கு உலகம் முழுவதும் தடுப்பூசிகள் கொடுத்தது தான் பாரதத்தின்’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பாரம்பரியம்.

ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் இந்தியாவுக்கு அதன் சிறப்பான பாரம்பரியத்தின் அடிப்படையில் கொள்கை பரிந்துரைகளை வழங்குவதற்கு இதுவொரு சிறப்பான வாய்ப்பாகும். அனைத்து படைப்புகளிலும் இறைவன் ஒருவனே இருப்பதையும், படைத்தவனுக்கும், படைக்கப்பட்டவைக்கும் இடையே வேறுபாடு இல்லை என்பதையும் நமது முனிவர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்தனர். பாரதத்துக்கே உரிய இந்த தனித்துவமான அனுபவத்தையும் மற்றும் ஒருமைப்பாட்டு உணர்வையும் ஒட்டுமொத்த உலகின் அனைத்து மனிதர்களுக்கும் நாம் கொண்டுபோய் சேர்ப்பது அவசியம்.

இன்று வறுமை, கல்வி, வேலையின்மை ஆகியவை பெறும் சவாலாக உள்ளது. இன்று நம்மிடம் சிறந்த கல்வி கொள்கை உள்ளது. ஒவ்வொரு அரசின் திட்டமும் மக்களின் நலன் சார்ந்ததே. டிஜிட்டல் இந்தியா என கூறிய போது பலரும் வியப்படைந்த நிலையில் இன்று உலக அளவில் அதிகமாக டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தும் நாடு பாரதம் தான் என்பதை பெருமிதத்துடன் கூறலாம். மகளிருக்கான அதிகார மேம்பாடு குறித்து பேசுகிறோம். பெண்களின் ஆற்றலைப் பயன்படுத்தாமல் எந்தவொரு நாடும் வளர்ச்சியை அடையாது. தமிழகத்தில் 15,000 பெண் வாக்காளர்கள் ஆண் வாக்காளர்களை விட அதிகமாக உள்ளனர் என எனக்கு வந்த தரவுகள் மூலம் அதிகாரப்பூர்வமாக இதனை கூறுகிறேன். இதேபோல, தொழில்நுட்ப வளர்ச்சியின் பலனாக இன்று நமது உணர்ச்சிகள் அனைத்தையும் எமோஜிகளால் வெளிப்படுத்தபட்டு வருகிறது. தாவரங்கள், விலங்குகளையும் நாம் கருத்தில் கொண்டு தொழில்நுட்பங்களை முன்னெடுக்க வேண்டும். தொழில்நுட்பம் என்பது மக்கள் சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் வகையில் இருக்க வேண்டும். 2014ல் குறைந்த தொழில் முனைவோர் இருந்த சூழலில் இன்று ஆயிரம் மடங்கு அதிகரிந்துள்ளது. 2070ல் கார்பன் இல்லா உலகமாக மாற வேண்டும்” என்று கேட்டு கொண்டார்.