பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ) வெளியுறவு அமைச்சர்களின் 2 நாள் மாநாடு கோவா நகரில் நடைபெற்றது. இரண்டாவது நாளாக நேற்று நடந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கவுன்சில் கூட்டத்தில் பேசிய பாரத வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “உலகமே கொரோனா, இக்கட்டான பொருளாதார சூழல் உள்ளிட்டவற்றின் விளைவுகளை எதிர்கொண்டு வரும் இன்றைய சூழலிலும், பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல்கள் தடையில்லாமல் தொடர்கின்றன. அதில் இருந்து நமது பார்வையை அகற்றுவது என்பது நமது பாதுகாப்பு நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும். பயங்கரவாதத்தை நியாயப்படுத்த எந்த ஒரு காரணமும் இருக்க முடியாது என்று நாம் நம்புகிறோம். எனவே எல்லை தாண்டிய பங்கரவாதம் உள்ளிட்ட அனைத்து வகையிலான பயங்கரவாத நடவடிக்கைகளையும் நாம் கட்டுப்படுத்தியாக வேண்டும்” என எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடாமல் பேசினார். பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரியும் இதில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக பொருளாதார நிலை குறித்து பேசிய ஜெய்சங்கர், “உலகளாவிய விநியோக சங்கிலியில் பல்வேறு சீர்குலைவுகள் ஏற்பட்டுள்ளன. இது உணவு, ஆற்றல் உள்ளிட்ட அனைத்திலும் பல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அவை வளரும் நாடுகளின் வளர்ச்சியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்த சிக்கல்களை உரிய காலத்தில் திறமையாக நிர்வகிக்கும் உலகளாவிய அமைப்புகளின் நம்பகத்தன்மையை அவற்றின் திறன்களில் உள்ள பற்றாக்குறையை வெளிப்படுத்தியுள்ளது. எனினும், இந்த சவால்கள், ஷாங்காய் கூட்டமைப்பு நாடுகள் கூட்டாக இணைந்து அவற்றை எதிர்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவே அமைகிறது. உலக மக்கள் தொகையில் 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் எஸ்.சி.ஓ நாடுகளில் வசிப்பதால் நமது ஒன்றிணைந்த முடிவுகள் உலக அளவில் நிச்சயம் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கான பலதரப்பட்ட அனுகுமுறைக்கு பாரதம் எப்போதும் துணை நிற்கும். அது தொடர்பான எங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு உற்ற நண்பனாக நாங்கள் எப்போதும் தயாராகவே உள்ளோம்” என தெரிவித்தார்.

மேலும், “ஆப்கன் மக்களின் நலனில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இதில், ‘மனிதாபிமான உதவிகளை வழங்குதல், அனைவரையும் உள்ளடக்கி பிரதிநிதித்துவப்படுத்தும் அரசை அமைத்தல், பயங்கரவாதம் மற்றும் போதை மருந்து கடத்தலைத் தடுத்தல், பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர்களின் உரிமைகளை பாதுகாத்தல் போன்றவை’ நமது முன்னுரிமைகளாக இருக்க வேண்டும்” என கூறினார்.