பிரபல தாதா சகோதரர்களுக்கு சிறை

உத்தரப் பிரதேசத்தின் காஜிபுர் மாவட்டம் முகமதாபாத் தொகுதியில் பிரபல தாதா முக்தார் அன்சாரியின் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்தனர். முக்தார் அன்சாரி, மாவ் தொகுதியில் 5 முறை எம்எல்ஏவாக இருந்தவர். இவர் மீது 60க்கும் மெற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த 2002ல் முகமதாபாத் தொகுதி தேர்தலில் முக்தார் அன்சாரியின் அண்ணன் அப்சல் அன்சாரி போட்டியிட்டார். ஆனால், பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணானந்த் ராய் வெற்றி பெற்றார். இதையடுத்து முக்தார் அன்சாரியின் கும்பலால், 2005ல் கிருஷ்ணானந்த் ராய் உட்பட 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக முக்தார், அப்சல் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் ஒரே சாட்சியான சசிகாந்த் ராய் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் 2019ல் விடுவிக்கப்பட்டனர். மேலும், 1997ம் ஆண்டில் வி.ஹெச்.பி மூத்த தலைவரும் தொழிலதிபருமான நந்த் கிஷோர் ரங்தா கொலை வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர்களை தண்டிக்க முடியாத சூழல் நிலவியது. கடந்த 2007ல் முக்தார், அப்சல் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்சல் தற்போது காஜிபுர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பியாக உள்ளார். இருவர் மீதான வழக்கை காஜிபுரில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இதில் தற்போது நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில், ரௌடி முக்தார் அன்சாரிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 லட்ச ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. அப்சல் அன்சாரி எம்.பி.க்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்சம் அபராதமும் விதித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஒரு மாதத்துக்குள் மேல் முறையீடு செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. குற்றவியல் வழக்கில் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி, எம்.எல்.ஏக்கள் தகுதி இழப்பார்கள் என்பதால் அப்சல் தனது எம்.பி பதவி தகுதியை இழக்கவுள்ளார்.