தேசத்தை இணைக்கும் மனதின் குரல்

இந்திய ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு கல்வி நிறுவனம் (IIMC) நடத்திய சிறப்பு ஆய்வில், பிரதமர் நரேந்திர மோடியின் பிரபலமான வானொலி நிகழ்ச்சியான ‘மனதின் குரல்’ உண்மையான பாரதத்தை நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறது என்று 76 சதவீத பாரத ஊடகவியலாளர்கள் நம்புகின்றனர். இந்நிகழ்ச்சி நாட்டின் பிற பகுதிகளில் உள்ள விஷயங்களைப் பற்றி மக்கள் இப்போது அதிகம் அறிந்து கொள்ளும்  போக்கை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அதனைப் பாராட்டத் தொடங்கியுள்ளனர். பதிலளித்தவர்களில் 75 சதவீதம் பேர், பாரதத்தின் தொலைதூரப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உறுதி செய்வதற்காக தன்னலமின்றி உழைக்கும் அடித்தட்டு மக்களைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தும் ஒரு தளமாக ‘மனதின் குரல்’ உருவெடுத்துள்ளதாகவும் நவீன பாரதத்தைக் கட்டியெழுப்பும் அறியப்படாத மனிதர்களை முழு தேசத்திற்கும் அறிமுகப்படுத்துகிறது என்றும் கருதுகின்றனர்.

இக்கல்வி நிறுவன தலைமை இயக்குநர் பேராசிரியர் சஞ்சய் திவிவேதியின் கூற்றுப்படி, ஏப்ரல் 12 மற்றும் 25, 2023க்கு இடையில் நிறுவனத்தின் வெளிவட்டாரங்கள் தொடர்புத் துறையால் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் உள்ள 116 ஊடக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களில், ஊடகவியலாளர்கள், ஊடக ஆசிரியர்கள், ஊடக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஊடக மாணவர்களுடன் தொடர்புடைய மொத்தம் 890 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். இவர்களில் பெண்கள் 326 பேரும் ஆண்கள் 564 பேரும் உள்ளனர். பதிலளித்தவர்களில் 66 சதவீதம் பேர் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள்.

பதிலளித்தவர்களின் கூற்றுப்படி, ‘நாட்டைப் பற்றிய அறிவு’ மற்றும் ‘நாட்டைப் பற்றிய பிரதமரின் பார்வை’ ஆகிய இரண்டு முக்கியக் காரணங்களாக நிகழ்ச்சியைக் கேட்க வேண்டுமென்ற ஆர்வம் ஏற்படுகிறது. பதிலளித்தவர்களிடம் அவர்கள் எப்படி கேட்கிறார்கள் என்று கேட்டபோது, ஏதேனும் ஒரு நிகழ்ச்சியைத் தவறவிட்டால், 63 சதவீதம் பேர் மற்ற ஊடகங்களை விட யூடியூபில் விரும்பிக் கேட்பதாகக் கூறினர். பதிலளித்தவர்களில் 76 சதவீதம் பேர் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் பல்வேறு விஷயங்களைக் கேட்பதன் மூலம் ஜனநாயக செயல்பாட்டில் பங்கேற்பதாக உணர்கிறார்கள்.

‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் விவாதித்த எந்தப் பிரச்சினை மக்களை அதிகம் பாதித்தது என்பதையும் இந்த ஆய்வு புரிந்து கொள்ள முயற்சித்ததாக பேராசிரியர் திவிவேதி சுட்டிக் காட்டியுள்ளார். பதிலளித்தவர்களில் 40 சதவீதத்தினர் ‘கல்வி’ என்று குறிப்பிட்டுள்ளனர். அதே நேரத்தில் 26 சதவீதத்தினர் ‘அடித்தட்டு மக்களின் சாதனைகள் பற்றிய தகவல்’ மிகவும் செல்வாக்கு மிக்க தலைப்பு என்று கூறியுள்ளனர்.

‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட தலைப்புகள் பற்றிய தகவல்களை மக்கள் யாருடன் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவும் ஆய்வு முயற்சித்தது. அதில், 32 சதவீதம் பதிலளித்தவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட பிரச்சினைகள் குறித்த தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதாகக் கூறியுள்ளனர். 29 சதவீதத்தினர் தங்கள் நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் தலைப்புகளைப் பற்றி விவாதிப்பதாகக் கூறினர். ஆய்வில் வெளிப்பட்ட மற்றொரு சுவாரஸ்யமான உண்மை, 12% பேர் வானொலியையும், 15% தொலைக்காட்சிகளையும், 37% பேர் இணைய அடிப்படையிலான தளங்களையும் ‘மனதின் குரல்’ கேட்க பயன்படுத்துகின்றனர் என தெரிய வந்துள்ளது.