பாதிரி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சர்ச்சுக்கு செல்லும் பெண்களையும் சிறுமிகளையும் பாதிரி ஷெரார்டு மனோகர் பாலியல் துஷ்பிரயோகம் செய்து துன்புறுத்தினார். பாதிக்கப்பட்ட பெண்ணின் பாட்டி ஒருவர் அளித்த புகாரின் பேரில் கடந்த ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட பிறகும் அந்த சர்ச்சை அவர் தொடர்ந்து நடத்தி வருவதாகவும், சர்ச் கட்டுவதற்காக அரசு சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளதாகவும் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சமூக ஆர்வலரும், தடை ஓட்டத்தில் தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்றவருமான எமி, பாதிரி ஷெரார்டு மனோகர் குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். இலங்கையைச் சேர்ந்த ஷெராட் மற்றும் அவரது மனைவி ஹெலன் ஆகியோர், சர்வே எண் 233/52 கொண்ட நிலத்தில் ஒரு குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் அனுமதியின்றி ஒரு சர்ச் கட்டி நடத்தி வருகின்றனர். அவர்கள் நடத்தும் கேட்டரிங் சேவைக்காக நீர்நிலைக்கு அருகில் உள்ள 650 சதுர அடி நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். சட்ட விரோதமாக மின் இணைப்பு பெற்று வணிக நோக்கத்திற்காக அதனை பயன்படுத்துகின்றனர். கடந்த ஆண்டு ஷெராட் சர்ச்சில், மூன்று பட்டியல் சமூக சிறுமிகளையும் ஒரு முஸ்லீம் சிறுமியையும் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். தனது மருமகள் மற்றும் 2 பேத்திகளை தன்னிடம் இருந்து பிரித்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக போதகர் மீது மூதாட்டி ஒருவர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில், போக்சோ குற்றம் சாட்டப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஷெராட்டின் பாரதக் குடியுரிமை ரத்து செய்யப்பட வேண்டும். விசாரணையை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.  இதேபோன்ற மற்றொரு மனுவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் அவர்கள் அனுப்பியுள்ளனர். அதில், பாதிரி ஷெராட்டின் அரசு சாரா நிறுவனத்திற்கு வரும் நிதியுதவிகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கு வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் படி உரிமம் பெற வேண்டும். ஆனால் ஷெரார்டு மனோகர் அப்படிப்பட்ட உரிமம் எதுவும் பெறாமல் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றுள்ளார். அவர் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது சர்ச் மற்றும் அதனுடன் தொடர்புடைய சொத்துக்களுக்கு சீல் வைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கூறியுள்ளனர்.