இதெல்லாம் உங்களுக்கு தேவையா?

கர்நாடகத்தில் உள்ள சிவமோகா நகரில் பா.ஜ.க. சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழர்கள் பெரும்பான்மையாக கலந்து கொண்ட நிகழ்ச்சி என்பதால், இந்நிகழ்வின் போது தமிழ்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது. அப்போது தமிழ்தாய் பாடல் மெட்டு சரியில்லாமல் தமிழ்தாயை அவமதிப்பது போல இருந்ததால் பாடல் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும்,ஒரு மாநிலத்தின் மாநில கீதம் பாடிய பிறகுதான் வேறு மாநிலத்தின் வாழ்த்துப்பாடல் இசைக்கப்படுவது நியதி. இதனை ஈஸ்வரப்பா சுட்டிக்கட்டினார். இதனை விமர்சித்த தி.மு.க எம்.பி கனிமொழி, தனது டுவிட்டர் பதிவில், “தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்தும் தனது கட்சிக்காரர்களைத் தடுக்க முடியாத அண்ணாமலை, தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப்படுவார்” என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, “அடித்துக் கொண்டு புரள அது தி.மு.க மேடை இல்லை சகோதரி கனிமொழி, ஒவ்வொரு மாநிலத்தின் மாநில கீதம் பாடிய பிறகுதான் வேறு மாநிலத்தின் வாழ்த்துப்பாடல் இசைக்கப்படும் என்பது நியதி. அந்த நியதியை தான் கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா சுட்டிக் காட்டினார். நமது தேசியக் கொடியை ஏற்றிய பின் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்று தெரியாத ஒரு தலைவரை வைத்துக்கொண்டு இதெல்லாம் உங்களுக்கு தேவையா? “கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்” என்ற வரியை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் இருந்து நீக்கி மாநில பிரிவினையை விதைத்த சரித்திரம் அல்லவா உங்களது. தமிழ் மக்களை, உங்களிடமிருந்தும் தி.மு.கவினரின் மலிவான அரசியலிலிருந்தும் காப்பாற்றுவதே எங்கள் ஒரே பணி” என தெரிவித்துள்ளார்.