சட்டம் போட்டு இயற்கை வளங்கள் சுரண்டல்

தமிழகத்தில் இருக்கும் 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்ந்த தமிழ்நாடு சட்டமன்றம் தொழிற்சாலைகள் சட்டம் 2023 திருத்தி குரல் வாக்கெடுப்பு மூலமாக தமிழக அரசு 21 ஏப்ரல் 2023 அன்று தமிழக சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆனால், அதே நாளில் சட்டப்பேரவையில் தமிழக வருவாய்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ‘தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023’ என்ற மசோதாவை தாக்கல் செய்தார். அந்த சட்டமும் தொழிற்சாலைகள் சட்டம் போலவே எந்த ஒரு விவாதமும் இன்றி அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், எந்த அளவிற்கு வேலை நேரத்தை உயர்த்தும் சட்டம் குறித்து பேசப்பட்டதோ, அந்த அளவிற்கு இந்த முக்கியமான சட்டம் முழுமையாக மறைக்கப்பட்டது. இதைப்பற்றி யாரும் வாய் திறக்கவில்லை. இந்த சட்டம் மூலம் நீர்நிலைகள், நீரோடைகள், வாய்க்கால்கள் அமைந்துள்ள 100 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள எவரும் தங்களுடைய நிலத்தை வணிகம், உள்கட்ட அமைப்பு, தொழில்துறை ஆகிய திட்டங்களுக்காக இந்த ஒரு சிறப்பு திட்டத்தின் மூலமாக விண்ணப்பித்து அரசிடம் அனுமதி பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அனுமதி பெற்ற பிறகு, தங்களுடைய நிலத்தை அரசு அனுமதியுடன் நில உரிமையாளர் எப்படி வேண்டுமென்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே, இந்த சட்டமானது இயற்கை வளங்களை, நீர் நிலைகளை விற்பதற்கு சமமானதாக உள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சியைச் சார்ந்த பலர், தங்களுடைய சொத்துக்களான கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகள், குடிநீர் தொழிற்சாலைகள் போன்றவற்றை இதுபோன்ற இடங்களை ஆக்கிரமித்து தான் கட்டி இருக்கிறார்கள். எனவே இந்த சிறப்புச் சட்டத்தின் மூலமாக அவர்கள் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டி இருப்பவற்றை பணம் கொடுத்து வாங்கியதாக கூறி தங்களுடைய இஷ்டத்திற்கு எப்படி வேண்டுமென்றாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற ஒரு தைரியத்தை இந்த சட்டம் ஏற்படுத்தித் தந்துள்ளது. தொழிலாளர் நல சட்டத்தை நிறைவேற்றினால் நிச்சயம் பிரச்சினைகள் வரும். அந்தப் பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த மசோதாவை மக்கள் மறந்துவிடுவார்கள் அல்லது மறைத்து விடலாம் என்று தி.மு.கவும், அதனுடைய கூட்டணி கட்சிகளூம் திட்டம் போட்டு இந்த செயலை அரங்கேற்றியிருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. தமிழகத்தின் நீர்நிலைகளை ஒட்டுமொத்தாகமாக அழிக்க வழி செய்யும் இந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து பா.ஜ.க மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.