காங்கிரஸ் எம்.பி’யின் மலிவான விளம்பரம்

கேரள மாநிலம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, கேரளாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரசை கொடியசைத்து தொடங்கி வைத்தார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தனது முதல் பயணத்தின் போது கேரளாவின் பாலக்காடு பகுதியில் உள்ள ஷோரனூரை அடைந்தவுடன் அதன் பக்கவாட்டு பகுதிகளில், ஜன்னல்களில் காங்கிரசை சேர்ந்த பாலக்காடு எம்.பி விகே ஸ்ரீகண்டனைப் புகழ்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் போஸ்டர்களை ஒட்டி மலிவான விளம்பரம் தேடிக்கொண்டனர். ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் இந்த சுவரொட்டிகளைக் கிழித்ததால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயிலில் சுவரொட்டிகளை ஒட்டியதற்கு பா.ஜ.க மாநிலத் தலைவர் கே. சுரேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ரயிலில் சுவரொட்டிகளை ஒட்டுமாறு எந்த கட்சித் தொண்டர்களுக்கும் அறிவுறுத்தவில்லை என்று மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைமை அவசர அவசரமாக அறிக்கை வெளியிட்டது. ரயிலில் தனது சுவரொட்டிகளை ஒட்ட யாருக்கும் அதிகாரம் அளிக்கவில்லை என்றும், பா.ஜ.க வேண்டுமென்றே சர்ச்சையை உருவாக்க முயற்சிப்பதாகவும் ஸ்ரீகண்டன் கூறியதாகவும் கூறப்படுகிறது.