பாதிரியால் பறிபோன உயிர்கள்

கென்யாவில் மலிந்தி நகருக்கு அருகில் உள்ள ஷகாஹோலா காட்டுப் பகுதியில் குவியல் குவியலாக பிணங்களை காவல்துறையினர் கண்டறிந்தனர். இது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்த விசாரணையில், உணவைத் தவிர்த்து விரதமிருந்தால் சொர்க்கத்துக்கு செல்ல முடியும் என்ற மூட நபிக்கையை கிறிஸ்தவ பாதிரி பால் மெக்கன்சி என்பவர் அப்பகுதி மக்களிடம் விதைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது ஆலோசனையை கேட்டு மக்கள் பலர் உணவருந்தாமல் இருந்தனர். சில நாட்களுக்கு முன் நான்கு பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து பாதிரி பால் மெக்கன்சி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது ஆலோசனையை கேட்டும் பலரும் உயிரிழந்த அதிர்ச்சித் தகவல் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து காவலர்கள் ஷகாஹோலா காட்டுப் பகுதியில் உள்ள கல்லறையில் தேடியபோது 47 பேரின் சடலங்களை மீட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் அடக்கம். இதையடுத்து, சம்பவம் நடந்த 800 ஏக்கர் பரப்பளவிலான காட்டுப் பகுதி சீல் வைக்கப்பட்டு தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், இறந்தவர்கள் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து பேசிய கென்ய உள்துறை அமைச்சர் கித்தூர் கிண்டிகி, “அப்பாவி மக்கள் உயிரிழந்த இந்தக் கொடூரத்துக்கு காரணமானவருக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சர்ச்சுகள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இனி தீவிரமாக கண்காணிக்கப்படும்” என தெரிவித்தார்.