கேரளாவில் பிரதமர்

இரண்டு நாள் பயணமாக கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை செல்லும் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயிலைத் தொடங்கி வைத்தார். இந்த ரயில் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு, பத்தனம்திட்டா, மாலப்புரம், கோழிகோடு, கண்ணூர், மற்றும் காசர்கோடு என 11 மாவட்டங்களை இணைக்கிறது. நடைமேடையில் இருந்து ரயிலைக் கொடி அசைத்து தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பின்னர் ரயிலின் உள்ளே இருந்த பள்ளி மாணவர்களுடன் உரையாடினார். அப்போது, “கேரளா மாநிலம் படிப்பறிவுக்கும் விழிப்புணர்வுக்கும் பெயர் பெற்ற மாநிலம். கடின உழைப்பும் மனிதாபிமானமும் இங்குள்ள மக்களின் அடையாளங்களில் ஒன்றாகும்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார். நிகழ்ச்சியில், கேரள ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான், மாநில முதல்வர் பினராய் விஜயன், திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர், நாட்டின் முதல் நீர்வழி மெட்ரோ சேவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். கொச்சி ‘வாட்டர் மெட்ரோ’ அத்துறைமுக நகரைச் சுற்றியுள்ள 10 தீவுகளை இணைக்கும். உயர் நீதிமன்றம் விபின் மற்றும் விட்டிலா கக்கநாட் இடையே என இரண்டு முனையங்களில் இருந்து இயக்கப்படும் இந்த சேவையை பயன்படுத்தி பயணிகள் விபினில் இருந்து உயர் நீதிமன்றத்திற்கு 20 நிமிடங்களில் மக்கள் செல்லலாம். விட்டிலாவில் இருந்து கக்கநாடு பகுதிக்கு 25 நிமிடங்களில் செல்லலாம். பயணிகளின் வசதியைக் கருதி ரூ. 20 முதல் ரூ.40 வரை டிக்கட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக 8 மின்சார ஹைப்ரிட் படகுகள் இயக்கப்படும். இதைத் தவிர, மின்மயமாக்கப்பட்ட திண்டுக்கல் பழனி பாலக்காடு வழித்தடப் பிரிவு, மேம்படுத்தப்படவுள்ள திருவனந்தபுரம், கோழிக்கோடு, வார்கால் சிவகிரி ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு ரயில் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.