மனதின் குரல் 100வது நிகழ்ச்சி பரிந்துரைகள்

பிரதமரின் ‘மனதின் குரல்’ 100வது நிகழ்ச்சியையொட்டி, மாணவர்கள் அதற்கான பரிந்துரைகளை வழங்குமாறு பல்கலைக் கழக மானியக் குழு (யு.ஜி.சி) அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக யு.ஜி.சி செயலாளர் மனிஷ் ஆர். ஜோஷி அனைத்து பல்கலைக் கழக துணைவேந்தர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “கடந்த 2014ல் பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு, ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும், ‘மனதின் குரல்’ என்ற பெயரில் அகில இந்திய வானொலிமூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். பிரதமர் மோடியின் 100வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி வரும் ஏப்.30ம் தேதி ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியை சிறப்பு மிக்கதாகவும், நீண்டகாலம் நினைவில் நிற்கும் வகையிலும் யோசனைகளையும், பரிந்துரைகளையும் வழங்குமாறு மத்திய அரசு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, பரிந்துரைகளை வழங்க விரும்பும் பொதுமக்கள், மத்திய அரசின் https://www.mygov.in என்ற இணையதளத்தில் 30 நொடிகளுக்கு மிகாமல் பரிந்துரைகளை பதிவு செய்யலாம். இந்த நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தும் வகையில், பதாகைகள் மற்றும் விளம்பர அட்டைகளின் வடிவமைப்புகள் https://drive.google.com/drive/folders/1Hj-75_Nymhg6an_H5yq8zR7A-1bZhWS0 என்ற இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளன. இவற்றை கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தி, கல்லூரி வளாகங்களில் இந்த நிகழ்ச்சி குறித்து பெரிய அளவில் விளம்பரப்படுத்தி, அதிக அளவில் மாணவர்கள், ஆசிரியர்கள் பரிந்துரைகளை வழங்க ஊக்கப்படுத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.