நாடும் மக்களும் தான் நமக்கு முதலில்

சிவில் சர்வீஸ் தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு விருது வழங்கி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ”இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், இது நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து வரும் முதல் சிவில் சர்வீஸ் தினம். அடுத்த 25 ஆண்டுகளில் மிகப் பெரிய இலக்குகளை அடைவதற்கான படியை நமது தேசம் எடுத்து வைத்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் மக்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பை பெற்றுள்ளதன் மூலம் நீங்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள். நமக்கு குறைந்த காலமே உள்ளது. ஆனால், நம்மிடம் அதிக வளங்கள் உள்ளன. நமது இலக்குகள் கடினமானதாக இருக்கலாம். ஆனால், நமது உறுதி குறைவானது அல்ல. நமது நோக்கம் வானத்தைவிட உயர்வானது. அரசு எவ்வளவு பெரிய பெரிய திட்டங்களை அறிவிக்கிறது என்பதோ, ஆவணங்களில் அது எவ்வாறு சிறப்பானதாக உள்ளது என்பதோ முக்கியமல்ல. அது, கடைசி மனிதனை முழுவதுமாக சென்றடைவதில் தான் அதன் வெற்றி அடங்கியுள்ளது. நாட்டை வேகமாக முன்னேற்றவும் நாட்டின் ஏழைகளுக்கு நல்ல அரசை கொடுப்பதற்கும் நாட்டின் வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கும் சிவில் சர்வீஸ் பணியாளர்கள் மிகப் பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறார்கள்.

கடந்த 9 ஆண்டுகளில் நல்ல அரசு என்பதன் மீது நாட்டின் ஏழைகளுக்கு மிகப் பெரிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. உங்களின் கடின உழைப்பு இதற்கு முக்கிய காரணம். தேசத்தின் வளர்ச்சிக்கு அதிகாரிகளே பொறுப்பு. உங்களின் துடிப்பான பங்களிப்பு இல்லாமல் கடந்த 9 ஆண்டுகளில் நாடு அடைந்துள்ள வளர்ச்சி, சாத்தியமில்லை. கொரோனா உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கு இடையிலும் நமது நாடு உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்திருக்கிறது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் உலகின் முதல் நாடாக பாரதம் உள்ளது, குறைந்த கட்டணத்தில் மொபைல் டேட்டா வழங்கும் நாடுகளில் ஒன்றாக உள்ளது, நமது கிராமப்புற பொருளாதாரம் மறுமலர்ச்சி அடைந்து வருகிறது. பாரதத்துக்கான நேரம் வந்துவிட்டதாக சொல்கிறார்கள். வளர்ச்சிக்கு நல்ல நிர்வாகம் அத்தியாவசியம் ஆகிறது. நாடும் மக்களும் தான் நமக்கு முதலில். இதுதான் நமது தாரகமந்திரம்” என்று கூறினார்.