ராகுலின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019ல் நடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவது ஏன்?” என்று கூறி ஒட்டுமொத்த இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரையும் விமர்சித்தார். இதனையடுத்து, குஜராத் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் மோடி, சூரத் பெருநகர நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மார்ச் 23ம் தேதி ராகுல் குற்றவாளி என தீர்ப்பளித்ததுடன் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. இதையடுத்து, ராகுல் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை சட்டப்படி இழந்தார். கடந்த 3ம் தேதி சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி, தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ஒரு மனுவும், குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி மற்றொரு மனுவும் தாக்கல் செய்தார். இந்த இரண்டு மனுக்களையும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, ராகுலுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைத்து ஜாமீன் வழங்கினார். ராகுல் குற்றவாளி என அறிவித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரும் மனு மீது பதில் அளிக்க புர்னேஷ் மோடிக்கும் குஜராத் மாநில அரசுக்கும் உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த மேல்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்தது.  பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருந்த இந்த வழக்கில், ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து ராகுல்காந்தி, தனது சிறை தண்டனையை எதிர்த்து, குஜராத் உயர் நீதிமன்றத்தை அணுகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.