நான் பா.ஜ.கவுடன் இருக்க விரும்புகிறேன்

திருணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான முகுல் ராய், தான் இன்னும் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினராக இருப்பதாகவும், மீண்டும் கட்சியில் சேர விரும்புவதால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்துத்துள்ளார். அவர், கடந்த திங்கட்கிழமை இரவு தனிப்பட்ட காரணங்களுக்காக டெல்லிக்குப் பயணம் செய்தார். அப்பது அவரது மகனும் திருணமூல் காங்கிரசை சேர்ந்தவருமான சுபர்க்ஷு ராய், முதலில் தனது தந்தையை காணவில்லை என்றும், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறியிருந்தார். இந்த சூழலில் தான், “நான் ஒரு பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர். நான் பா.ஜ.கவுடன் இருக்க விரும்புகிறேன். நான் இங்கு இருப்பதற்கான ஏற்பாடுகளை கட்சி செய்துள்ளது. நான் அமித் ஷாவையும் பா.ஜ.க கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து பேச விரும்புகிறேன். சில நாட்களாக எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், அரசியலில் இருந்து விலகி இருந்தேன். ஆனால் தற்போது, நான் நலமாக உள்ளேன், மீண்டும் அரசியலில் ஈடுபடுவேன். நான் ஒருபோதும் திருணமூல் காங்கிரஸுடன் இணைந்திருக்க மாட்டேன் என்பதில் 100 சதவீத நம்பிக்கையுடன் இருக்கிறேன். எனது மகனும் என்னுடன் பா.ஜ.கவில் சேர வேண்டும், அதுவே அவருக்கு மிகவும் பொருத்தமானது” என்று முகுல் ராய் பெங்காலி செய்தி சேனல் ஒன்றிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து அவரது மகன், எனது தந்தை முகுல்ராய் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவர் சரியான மனநிலையில் அவர் இல்லை. டல்நிலை சரியில்லாத நபருடன் அரசியல் செய்ய வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். கடந்த மாதம் எனது தந்தைக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரால் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய கூட்டாளிகளை கூட அடையாளம் காண முடியவில்லை என்று கூறி, பா.ஜ.க இதில் அரசியல் செய்வதாகக் குற்றம் சாட்டினார். இருப்பினும், “முகுல் ராயை மீண்டும் கட்சியில் சேர்ப்பதில் நாங்கள் ஆர்வமாக இல்லை என்று பா.ஜ.க மூத்த தலைவரான சுவேந்து அதிகாரி கூறியுள்ளார். 2017ல், கட்சித் தலைமையுடனான மோதல்களால் முகுல் ராய் திருணமூல் காங்கிரசில் இருந்து வெளியேறி பா.ஜ.கவில் இணைந்தார். பின்னர், அவர் பா.ஜ.கவின் தேசிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2021 தேர்தலில் பா.ஜ.க சார்பில்,மேற்குவங்கத்தில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். ஆனால் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மீண்டும் ருணமூல் காங்கிரஸ் கட்சிக்கே திரும்பினார். எனினும், அவர் அக்கட்சிக்கு திரும்பியதில் இருந்து அக்கட்சி அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.