மோடி அரசில் கசப்பான அனுபவங்கள் இல்லை

ஈஸ்டர் பண்டிகையையொட்டி டெல்லியில் நடைபெற்ற ஈஸ்டர் விழாவுக்கு சென்றிருந்த கேரள சிரியன் சர்ச் தலைவர் 3ம் பசிலியோ மார்த்தோமா மேத்யூஸ், டெல்லியில் ஒரு வாரம் தங்கி இருந்தார். அப்போது அவர், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை தனது குழுவினருடன் சந்தித்துப் பேசினார். பின்னர் கேரள திரும்பிய அவர், கேரளாவின் தேவலோகம் பகுதியில் உள்ள சர்ச்சின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பிரதமர் மோடி அரசால் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. நாங்கள் இயல்பாகவே உணர்கிறோம். எனினும், மற்ற கிறிஸ்தவ பிரிவினர் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் பேசினேன். கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களை கண்டிக்க வேண்டும். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். எனினும், பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கீழ் நாங்கள் எந்த கசப்பான அனுபவங்களையும் இதுவரை சந்தித்தது இல்லை. உண்மையில் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்தது சுமூகமானதாக, இயல்பானதாக இருந்தது. அதேவேளையில் தவறான நடவடிக்கைகளை நாங்கள் சுட்டிக் காட்டுவோம். சிறுபான்மையினராக உள்ள கிறிஸ்தவர்களின் பாதுகாப்புக்கான நடவடிக்கை பா.ஜ.க தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் இருந்து வரும்போது தானாகவே கிறிஸ்தவர்களிடம் இருந்து பா.ஜ.கவுக்கு மதிப்பு கூடும். நாட்டில் ஏழைகளுக்காக பல திட்டங்களை பா.ஜ.க சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. ஊரக வேலைவாய்ப்பு திட்டம், ஆஷா பணியாளர்கள் என பல திட்டங்களை இதற்கு உதாரணம் காட்டலாம். பா.ஜ.க அரசின் அந்த நல்ல பணிகளை நாம் அங்கீகரிக்க வேண்டும். காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணி காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தது அவரது விருப்பம். காங்கிரஸ் கட்சியில் அவரால் ஏன் இருக்க முடியவில்லை என்பது குறித்து காங்கிரஸ் தான் சிந்திக்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஏனெனில், வலிமையான எதிர்க்கட்சியே இங்கு இல்லை. அவை ஒன்றாக இணைவதற்கான சாத்திய கூறுகளும் இல்லை. ஆர்த்தோடக்ஸ் சர்ச்சை பொறுத்த வரையில் எந்த அரசியல் நிலையும் எடுக்கவில்லை” என கூறினார்.