உச்ச நீதிமன்றத்தில் ஞானவாபி மசூதி வழக்கு

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி சர்ச்சைக்குரிய ஞானவாபி மசூதி உள்ளது. நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த மசூதியில் நடத்தப்பட்ட ஆய்வில், தொழுகைக்கு முன்பாக பயன்படுத்தப்படும் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மசூதியின் ஒசுகானா பகுதிக்கு சீல் வைக்கப்பட்டது. எனினும் அங்கு வழக்கப்படி தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாரணாசி சிவில் நீதிமன்றம், அலகாபாத் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகள் விசாரணையில்; உள்ளன. இந்நிலையில், ஞானன்வாபி மசூதியை நிர்வகிக்கும் அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “ரம்ஜான் மாதத்தில் ஞானவாபி மசூதிக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒசுகானா பகுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் தொழுகைக்கு வருவோர் சிரமப்படுகின்றனர். எனவே அதற்கான மாற்று வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்’’ என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி, வரும் 14ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார். அதேசமயம், ஞானவாபி மசூதியில் சிவ லிங்கம் கண்டெடுக்கப்பட்ட ஒசுகானாவுக்கு நிரந்தரமாக சீல் வைக்கக் கோரி ஹிந்துக்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. இம்மனு மீது வரும் 21ம் தேதி விசாரணை நடத்தப்பட உள்ளது.