அக்னிபத் திட்டம் செல்லுபடியாகும்

பாரதத்தின் முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் ‘அக்னிபத்’ என்ற புரட்சிகரமான திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டுவந்தது. 17½ வயது முதல் 23 வரையிலான இளைஞர்கள் இந்த திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். இதற்கு இளைஞர்கள் மத்தியில் அமோக ஆதரவு உள்ளது. லட்சக்கணக்கானோர் இதற்கு விண்ணப்பிக்கின்றனர். எனினும், எதிர்கட்சிகள், இடதுசாரி அமைப்புகள், சில மதவாத அமைப்புகள் போன்றவை இந்த அக்னிபத் திட்டத்தை எதிர்த்து மக்களை தூண்டி விட்டும் தங்களது ஆட்களை வைத்தும் நாடு முழுவதும் திட்டமிட்ட போராட்டங்களை நடத்தின. அக்னிபத் திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது, இந்த திட்டத்தை வாபஸ் பெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படை, ராணுவம், கடற்படை என மும்படைகளிலும் ஆட்சேர்ப்பு பணிகள் நடத்தப்பட்டன. இதனிடையே, அக்னிபத் திட்டத்தை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், தேச நலனுக்காகவும், பாதுகாப்பு படையை மேம்படுத்த இந்த திட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளதாகவும் இத்திட்டம் அரசியல் சாசனப்படி செல்லும் என்றும் தனது உத்தரவில் தெரிவித்தது. டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், அக்னிபத் திட்டத்திற்கு எதிரான மேல் முறையீட்டு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் அக்னிபாத் திட்டம் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.