தெலங்கானா, தமிழகம், கர்நாடகாவுக்கு பிரதமர் பயணம்

பாரதப்பிரதமர் நரேந்திர மோடி, தெலங்கானா, தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு வரும் 8 மற்றும் 9ம் தேதிகளில் பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன் பல்வேறு நலத்திட்டங்களையும் கட்டி முடிக்கப்பட்ட உட்கட்டமைப்புத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

தெலங்கானாவில் பிரதமர்: 8ம் தேதி காலை 11.45 மணியளவில் செகந்திராபாத் ரயில் நிலையத்தை அடையும் பிரதமர், தெலங்கானாவில் ரூ. 11,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர், கட்டி முடிக்கப்பட்ட திட்டங்களை தொடங்கி வைக்கிறார். ஹைதராபாத்தையும் திருப்பதியையும் இணைக்கும் செகந்திராபாத் திருப்பதி வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். கடந்த 3 மாதம் என்னும் குறுகிய காலத்தில் தெலங்கானாவில் தொடங்கப்படும் 2வது வந்தே பாரத் ரயில் இதுவாகும். பகல் 12.15 மணியளவில் பிரதமர் ஹைதராபாத் அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அங்கு ஐதராபாத் பிபி நகர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். 5 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த சாலைத் திட்டங்கள் தெலங்கானா, ஆந்திரா இடையே சாலை இணைப்பை வலுப்படுத்துவதுடன் இந்த பிராந்தியத்தில் சமூகப்பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். செகந்திராபாத் ரயில் நிலைய மறுமேம்பாட்டுத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டும் அவர், ரயில்வே தொடர்பான மேம்பாட்டுத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். செகந்திராபாத் மெகபூப் நகர் மின்மயமாக்கல் மற்றும் இரட்டை ரயில் பாதை திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

தமிழகத்தில் பிரதமர்: மாலை 3 மணியளவில் பிரதமர் சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார். பின்னர், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ. 1,260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தின் முதல்பகுதியை பிரதமர் தொடங்கிவைக்கிறார். இந்தப் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடம், விமான நிலையத்தின் பயணிகள் சேவைத் திறனை ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகள் என்ற அளவில் இருந்து 30 மில்லியன் பயணிகளாக உயர்த்தும். இந்தப் புதிய முனையம், கோலம், சேலை, கோயில்கள் போன்ற பாரம்பரிய அம்சங்களைக் கொண்ட தமிழ் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும். இயற்கையான சுற்றுப்புறத்தைக் கொண்டதாக அமையும். பின்னர், சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ளும் பிரதமர், சென்னை கோயம்புத்தூர் இடையேயான வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை கொடியசைத்து தொடங்கிவைப்பார். தாம்பரம் செங்கோட்டை இடையிலான விரைவு ரயில் சேவையையும் திருத்துறைப்பூண்டி  அகஸ்தியம் பள்ளி இடையிலான ரயில் சேவையையும் பிரதமர் தொடங்கிவைப்பார்.

சென்னை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் 125ம் ஆண்டு கொண்டாட்டத்திலும் பிரதமர் கலந்து கொள்கிறார். 1897ம் ஆண்டு சென்னையில் ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தை சுவாமி ராமகிருஷ்ணானந்தா தொடங்கினார். ராமகிருஷ்ணா மடம் மற்றும் ராமகிருஷ்ணா மிஷன் ஆகியவை மனிதகுலத்துக்கு சமூகசேவை நடவடிக்கைகள் மூலம் பல்வேறு வடிவத்தில் சேவைகளை வழங்கும் ஆன்மிக அமைப்பாக உள்ளது. சென்னை அல்ஸ்தம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் ரூ. 3,700 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மதுரை நகரில் 7.3 கி.மீ. நீள மேல்மட்டச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 785ன் 24.4 கி.மீ. நீள 4 வழிச்சாலை ஆகியவற்றை அவர் தொடங்கிவைப்பார். தேசிய நெடுஞ்சாலை 747ல் சாலைத் திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டுவார். ரூ. 2,400 கோடிக்கும் அதிக மதிப்பிலான இந்தத் திட்டம் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் இடையே சாலை இணைப்பை மேம்படுத்தும். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், கேரளாவில் உள்ள சபரிமலை ஆகியவற்றுக்கு பக்தர்கள் வசதியாக பயணம் செய்வதை  இது உறுதிசெய்யும்.

கர்நாடகத்தில் பிரதமர்: பந்திப்பூர் புலிகள் சரணாலயத்திற்கு காலையில் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார். புலிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுயஉதவிக் குழுக்கள் மற்றும் முன்னணி ஊழியர்களுடன் கலந்துரையாடுவார். முதுமலை புலிகள் சரணாலயத்தில் அமைந்துள்ள தெப்பக்காடு யானைகள் முகாமுக்கும் செல்லும் பிரதமர், அங்கு யானைப்பாகன்கள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடுவார். அண்மையில் முடிவடைந்த 5வது மேலாண்மைத் திறன் பயிற்சிகளில் வெற்றி பெற்ற புலிகள் சரணாலயத்தின் கள இயக்குனர்களுடனும் பிரதமர் கலந்துரையாடுவார். சர்வதேச புலிகள் கூட்டணியை பிரதமர் தொடங்கிவைப்பார். புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் 50ம் ஆண்டை குறிக்கும் நிகழ்ச்சியையும் பிரதமர் தொடங்கிவைப்பார். இந்த நிகழ்ச்சியின் போது அவர் புலிகள் பாதுகாப்புக்கான அமிர்தகால தொலைநோக்கை வெளியிடுவார். மேலும் புலிகள் சரணாலயங்களில் மேலாண்மை திறன் மதிப்பீட்டு அறிக்கையையும் அவர் வெளியிடுவார். புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் 50 ஆண்டை குறிக்கும் நினைவு நாணயத்தையும் பிரதமர் வெளியிடுவார்.