இலவசங்கள் ஆபத்து

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பெங்களூருவில் உள்ள கப்பன் பூங்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், “மேற்கத்திய நாடுகள் பிற நாடுகளின் விஷயங்களில் அதாவது நமது ஒருமைப்பாடு, இறையாண்மை, சட்ட விஷயங்களில் தமது கருத்துக்களே மேலானவை என்று கருதும் மனநிலையில் இன்னும் வெளியே வரவில்லை. தங்கள் நாடுகளுக்கு இது கடவுள் கொடுத்த உரிமை போல அவர்கள் கருதுகின்றனர். இத்தகைய செயல், மேற்குலகின் வேரூன்றிய நடத்தையாகவே உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் மற்ற நாடுகள், மேற்கத்திய நாடுளின் விஷயத்தில் கருத்து கூற தொடங்குவது இயல்பானதாக இருக்கும். அது நடக்கும் போது அவர்கள் கண்டிப்பாக அதை விரும்ப மாட்டார்கள் என்பதை அவர்கள் அனுபவத்தால் மட்டுமே கற்றுக்கொள்வார்கள். நமது நாட்டில் இருக்கும் சிலர், மேற்கத்திய நாடுகளுக்கு சென்று நமது நாட்டை அவமதிக்கும் வகையில் பேசி அவர்களுக்கு அழைப்பு விடுக்கும் செயல்களால் தான் அவர்கள் நமது விஷயங்களில் கருத்து கூறுகிறார்கள். இத்தகைய மனநிலை கொண்ட நமது நாட்டில் உள்ளவர், வெளிநாட்டில் உள்ளவர்களின் அடிப்படை பிரச்சனையை தீர்க்க வேண்டியது அவசியம். இலவசங்கள் அளிப்பது நாடு முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. இது ஆபத்தான போக்கு. இலவசங்களை கொடுத்தால் நிதி ஆதாரங்களை திரட்டுவதில் பெரும் சவால்கள் ஏற்படும். இலவசங்களின் அடிப்படையில் ஒரு நாட்டை நடத்த முடியாது. தற்காலிக அரசியல் ஆதாயத்திற்காக அறிவிக்கப்படும் இலவச திட்டங்களால், யாரோ ஒருவர் அதற்கான விலையை கொடுக்க வேண்டி வரும். இலவச திட்டங்களுக்கு வேறு ஆதாரங்கள் மூலம் நிதி திரட்ட வேண்டும். கட்சிகள் அறிவிக்கும் பொறுப்பற்ற இலவச திட்டங்களால் நாட்டின் நிதியாதாரத்திற்கு பெரிய அளவில் ஆபத்து ஏற்படுகிறது. இங்கே இலவசம் கொடுப்பவர்கள், வேறு எதையாவது எடுத்துச் செல்கிறார்கள். இலவசங்கள் விரைவான பிரபலத்தைப் பெறுவதற்கான ஒரு வழியாகும். இது பொறுப்பற்ற முறை. ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை பாரதம் ஏற்றுள்ளது. ஜி20 நாடுகள் அல்லாத நாடுகளை தொடர்பு கொண்டு அந்நாடுகளின் பிரச்சினைகளை கேட்டு அவற்றை தீர்க்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். இதற்கு முன்பு ஜி20 நாடுகளின் கூட்டம் 2, 3 நகரங்களில் தான் நடைபெறும். ஆனால், பாரதத்தின் தலைமையிலான ஜி20யில், தற்போது 60 நகரங்களில் இத்தயை கூட்டங்களை நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளோம். நமது பல்வேறு கலாசாரங்களை உலக நாடுகளின் பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம்” என கூறினார்.