சி.பி.ஐ எனக்கு நெருக்கடி கொடுத்தது

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ”ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது மத்திய புலனாய்வு அமைப்புகள் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்பட்டன என்று நான் உங்களுக்கு விளக்க முடியும். அதில் நானே நேரிடையாக பாதிக்கப்பட்டுள்ளேன். காங்கிரஸ் கட்சி எங்கள் மீது ஊழல் வழக்குகளை பதிவு செய்யவில்லை. அப்போது நான் குஜராத்தின் உள்துறை அமைச்சராக இருந்தபோது அங்கே ஒரு என்கவுண்ட்டர் நடந்தது. அது தொடர்பாக என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சி.பி.ஐ என்னை கைதும் செய்தது. பின்னர் அவர்கள் நடத்திய விசாரணையின் போது 90 சதவீத கேள்விகள், நான் ஏன் இதில் சிக்கிகொண்டு வருத்தப்படுகிறேன் என்பதாகவே இருந்தது. அவர்கள், இதற்கு நரேந்திர மோடிதான் காரணம் என்று நான் சொன்னால் என்னை விட்டுவிடுவதாக கூறினார்கள். ஆனால், அப்போது நாங்கள் கறுப்பு உடையணிந்து போராட்டம் நடத்தவில்லை. நாடாளுமன்றத்தை முடக்கவில்லை. நரேந்திர மோடிக்கு எதிராக சிறப்பு புலனாய்வு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. பின்னர் உச்ச நீதிமன்றம் அதனை விசாரித்து தள்ளுபடி செய்தது. 90 நாட்களுக்கு பிறகு, எனக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி உயர் நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்கியது. அப்போது என்னுடைய வழக்கு மும்பையில் நடந்தது. அரசியல் அழுத்தம் காரணமாகவே என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று கூறிய நீதிமன்றம், என் மீதிருந்த அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது. இப்போது இருக்கும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங், ப. சிதம்பரம் உள்ளிட்ட எல்லோரும் அப்போதும் இருந்தார்கள். அந்த விசாரணையில் அவர்கள் மோடியின் பெயரைச் சொல்லும்படி என்னை வற்புறுத்தினார்கள். நான் ஏன் அவரின் பெயரைச் சொல்ல வேண்டும்? என்னால் பல அப்பாவி காவலர்கள் கூட சிறையில் அடைக்கப்பட்டார்கள். இப்போது அதே காங்கிரஸ் கட்சிய்னர், தங்களது விதியை நினைத்து அழுகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் மக்கள் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறார்கள். நாங்கள் ஒரு போதும் கறுப்பு உடையணிந்து வீதியில் இறங்கிப் போராடவில்லை. நீங்கள் நிரபராதி என்றால் சட்டத்தின் மீது நம்பிக்கை வையுங்கள்” என்று கூறினார்.