புதுச்சேரியில் பா.ஜ.க பிரமுகர் கொலை

புதுச்சேரி கனுவாப்பேட்டை முதல் வன்னியர் தெருவில் வசித்து வந்தவர் செந்தில்குமரன். புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் உறவினரான இவர் மங்களம் தொகுதி பா.ஜ.க பொறுப்பாளராக உள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் மீது வில்லியனூரில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் வீசியும் வெட்டியும் அவரை 7 பேர் கொண்ட ஒரு கும்பல் படுகொலை செய்துவிட்டு விழுப்புரம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் தப்பிச்சென்றது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், இறந்து கிடந்த செந்தில்குமரனின் உடலை பார்த்து அழுதார். செந்தில்குமரன் உடலை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். சம்பவ இடத்தின் சிசிடிவி காமிராக்கள் பதிவுகளும் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. செந்தில்குமரனை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் சம்பவம் நடந்த இடத்தின் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏடிஜிபி ஆனந்த மோகன் தலைமையிலான காவலர்கள், குற்றவாளிகளை விரைந்து பிடிப்பதாக உறுதிதந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். நேற்று, வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோயில் நான்கு மாத வீதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. பிரபல ரௌடி நித்யானந்தம் அவனது கூட்டாளிகளோடு சேர்ந்து இந்த கொலை செய்திருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு செந்திலுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக அவர், வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் செய்திருப்பதாகத் தெரிகிறது.

இதனிடையே, இந்தக் கொலை வழக்கு சம்பந்தமாக புதுச்சேரி சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் சிவா பேசுகையில், “வில்லியனூரில் அமைச்சரின் உறவினரே கொலை செய்யப்பட்டுள்ளது மக்களை அச்சப்படுத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்த வேண்டியது வில்லியனூர் காவல் துறை ஆய்வாளரின் நடவடிக்கையே. சட்டம் ஒழுங்கு சீர்கெடுவதற்கு அவரே முழுக் காரணமாக இருக்கிறார் என்று மக்கள் மத்தியில் ஏளனமாக பேசப்படுகிறது. வில்லியனூரில் எஸ்.பி இருந்தும் அவரின் கைகள் கட்டப்பட்டுள்ளதால் ஆய்வாளரின் அதிகார அத்துமீறல் அதிகரித்துள்ளது. உளவுத் துறை, எஸ்.பி பிரிவு காவலர்கள் சரியான தகவல் கொடுத்தும் ஆய்வாளர் நடவடிக்கை எடுக்காததால், இந்த படுகொலை அரங்கேறியுள்ளதாக கூறப்படுகிறது. அரசு இதுபோன்ற செயல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். கொலையாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அதுவரை அந்த ஆய்வாளரை தற்காலிக பணிநீக்கம் செய்து, வேறு ஒரு அதிகாரியை நியமித்து, இந்த வழக்கின் உண்மை நிலை வெளியில் வரவேண்டும்” என்று கூறினார். அதைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ரங்கசாமி, “கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். காவல் துறை கடமையை கண்டிப்பாக செய்யும்” என்றார். இவ்வழக்கில் குற்றவாளிகளை தனிப்படை காவலர்கள் தேடிவந்த நிலையில், திருச்சி ஜே.எம்.எண் 3 நீதிமன்றத்தில் நீதிபதி பாலாஜி முன்பு குற்றம் சாட்டப்பட்ட ரௌடி நித்தியானந்தம், சிவசங்கர், ராஜா, பிரதீப், கார்த்திக், விக்னேஷ், வெங்கடேசன் ஆகிய 7 பேரும் சரண் அடைந்தனர்.