வேங்கைவயல் விவகாரம் மனு தள்ளுபடி

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக பண்ருட்டியை சேர்ந்த வி. மார்க்ஸ் ரவீந்திரன் சார்பில், வக்கீல் ஜி.எஸ். மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிய தமிழக அரசு தவறிவிட்டது. எனவே, இந்த விவகாரத்தை சி.பி.ஐ. அல்லது ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இந்த சம்பவத்தை தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார். இந்த பொதுநல மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் கிஷன் கௌல் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது குறிப்பிட்ட மாநிலத்தில், குறிப்பிட்ட பகுதியில் நடைபெறும் விவகாரத்தை விசாரிக்க உயர் நீதிமன்றம் உள்ளது. உயர் நீதிமன்றம் இருக்கும்போது உச்ச் நீதிமன்றம் இதில் ஏன் தலையிட வேண்டும்? என நீதிபதி சஞ்சய் கிஷன் கேள்வி எழுப்பினார். குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் தேவைப்பட்டால் மனுதாரர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடலாம் என நீதிபதி அறிவுறுத்தினார்.