பாடம் புகட்டிய பாரதம்

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பாரதத் தூதரகத்துக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென நுழைந்த காலிஸ்தான் பிரிவினைவாதிகள், தூதரக கட்டடத்தின் முன்புறம் உள்ள கம்பத்தில் இருந்து மூவர்ணக் கொடியை கீழிறக்கினர். காலிஸ்தான் கொடியை ஏற்ற முயன்றனர். அதுவரை மிக அலட்சியமாக இருந்த லண்டன் காவல்துறையினர் பின்னர் செயல்பட்டு அவர்களை அகற்றினர். இந்தச் சம்பவத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. டெல்லியில் உள்ள இங்கிலாந்து துணைத் தூதரை அழைத்து, லண்டன் தூதரகத்துக்கு வழங்கப்படும் பாதுகாப்பில் அலட்சியம் காட்டியதற்கு கடுமையான ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதுடன் அந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியின் சாணக்கியபுரி சாந்திபாத் பகுதியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் மற்றும் டெல்லியின் ராஜாஜி மார்க் பகுதியில் உள்ள இங்கிலாந்து தூதர் அலெக்ஸ் எல்லீஸ் இல்லத்துக்கு வெளியில் பாதுகாப்புக்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றியது. எனினும், இரண்டு இடங்களிலும் நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப் படை வீரர்களின் எண்ணிக்கை எதுவும் குறைக்கப்படவில்லை. மத்திய அரசு புகட்டிய இந்த பாடத்தால், பதற்றமடைந்த இங்கிலாந்து அரசு, உடனடியாக செயல்பட்டு லண்டனில் உள்ள பாரதத் தூதரகத்தின் பாதுகாப்பை பன்மடங்கு அதிகரித்தது. இதுகுறித்து பேசிய இங்கிலாந்து தூதரகசெய்தித் தொடர்பாளர், ‘‘பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை’’ என்று கூறி நழுவிவிட்டார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் எந்தக் கருத்தும் வெளியிடவில்லை.