பா.ஜ.கவுக்கு புதிய தலைவர்கள்

டெல்லி, பீகார், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.கவுக்கு புதிய தலைவர்களை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உத்தரவிட்டுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஜே.பி நட்டா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என கூறப்படுகிறது. அவ்வகையில், பா.ஜ.கவின் டெல்லி மாநில தலைவராக வீரேந்திர சச்தேவாவை ஜேபி நட்டா நியமித்துள்ளார். சச்தேவா தற்போது டெல்லி பா.ஜ.க செயல் தலைவராகப் பணியாற்றி வருகிறார். இதேபோல, ராஜஸ்தானைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி சிபி ஜோஷிக்கு, ராஜஸ்தான் மாநில தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் ஆம்பர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருக்கும் சதீஷ் பூனியாவுக்குப் பதிலாக சிபி ஜோஷி மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பீகார் மாநில பா.ஜ.க தலைவராக இருந்த சஞ்சய் ஜெய்ஸ்வாலுக்குப் பதிலாக பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சாம்ராட் சௌத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.கவின் ஒடிசா மாநில தலைவராக முன்னாள் மாநில அமைச்சரான மன்மோகன் சமல் நியமிக்கப்பட்டுள்ளார்.