காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு பாடம்

பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதத்தைத் தூண்டிய அம்ரித்பால் சிங் என்பவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அவரது ஆதரவாளர்கள் 114 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் செயல்படும் பாரதத் தூதரகத்தில் இரு தினங்களுக்கு முன் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் புகுந்து அங்கிருந்த தேசியக் கொடியை அகற்றினர். இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேரில் வரவழைத்து கடும் கண்டனம் தெரிவித்தது. காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், லண்டனில் உள்ள பாரதத் தூதரகத்தில் பிரம்மாண்ட தேசியக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாகி உள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள பாரதத் தூதரகத்திலும் தேசியக் கொடியை காலிஸ்தான் பிரிவினைவாதிகள் அகற்றியுள்ளனர். இதுகுறித்து அமெரிக்க அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இதனிடையே இந்த விவகாரம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “லண்டனில் உள்ள பாரதத் தூதரகத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்காதது ஏன் என்பது குறித்து இங்கிலாந்து தூதரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தொடர்பாக இங்கிலாந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறிழைத்தோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.