ராகுல் வீட்டுக்கு சென்று டெல்லி போலீஸ் விசாரணை

 ‘பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர்’ என்று பேசிய ராகுல் காந்தியிடம் விவரங்கள் சேகரிக்க அவரது வீட்டுக்கு டெல்லி போலீஸார் நேற்று சென்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சமீபத்தில் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ நடத்தினார். கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் யாத்திரையை முடித்தார் ராகுல். அப்போது நகரில் அவர் பேசும்போது, ‘‘நாட்டில் பெண்கள் இன்னமும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர்’’ என்று தெரிவித்தார். இந்த சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விளக்கம் அளிக்கும்படி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். ஆனால், அவர் விளக்கம் அளிக்கவில்லை. இதையடுத்து, டெல்லி சட்டம் ஒழுங்கு பிரிவு சிறப்பு போலீஸ் ஆணையர் சாகர் பிரீத் ஹூடா தலைமையிலான போலீஸார், ராகுல் வீட்டுக்கு சென்றனர். டெல்லி துக்ளக் லேன் பகுதியில் உள்ள ராகுல் காந்தியின் 12-ம் எண் வீட்டுக்குப் போலீஸார் சென்றனர். ‘‘நாட்டில் பெண்கள் இன்னமும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாக ராகுல் பேசியுள்ளார். அதுதொடர்பான விவரங் களை காவல் துறைக்கு அவர் அளித்தால்தான் பாதிக்கப் பட்டவர்களை அறிந்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியும்’’ என்று போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆணையர் சாகர் பிரீத் கூறியதாவது: ராகுல் காந்தியை சந்தித்து அவர் பேசியது தொடர்பான விவரங்களை கேட்டோம். அவரும் பாத யாத்திரையின் போது பேசியது தொடர்பான தேவையான விவரங்களை அளிப்பதாக கூறியிருக்கிறார். அதற்கு சற்று கால அவகாசம் கேட்டுள்ளார். மேலும், இதுதொடர்பாக நாங்கள் அளித்த நோட்டீஸையும் ராகுல் காந்தியின் அலுவலகத்தினர் பெற்றுக் கொண்டனர். ராகுல் காந்தியிடம் இருந்து விவரங்கள் வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுப்போம்.இவ்வாறு ஆணையர் சாகர் பிரீத் கூறினார்.