தமிழகத்தில் சிறுதானிய கண்காட்சி

இந்த ஆண்டு, சர்வதேச சிறு தானிய ஆண்டாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு மத்திய அரசின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அவ்வகையில், தமிழகத்தின் மதுரையில், மத்திய அரசின் உணவு பதனத் தொழில்கள் அமைச்சகம் 2023 மார்ச் 6,7 ஆகிய தேதிகளில் ‘சிறுதானிய சந்தை மற்றும் கண்காட்சி’க்கு ஏற்பாடு செய்திருந்தது. தமிழக அரசின் வேளாண் சந்தை மற்றும் வேளாண் வணிகத்துறையின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையும் இணைந்து நடத்திய சிறுதானியங்கள் விழா தொடரின் ஒரு பகுதியாக இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கம்பு, கேழ்வரகு, தினை, மக்காச்சோளம், சோளம் போன்ற சிறு தானியங்களுக்கு தமிழகம் பெயர் பெற்றதாகும். பிரதமரின் உணவு பதன குறுந்தொழில் உருவாக்கத் திட்டத்தின் கீழ், முதலாவது பொதுவான புத்தொழில் முயற்சி மையத்தை தமிழக அரசின் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.  மூர்த்தி தொடங்கிவைத்தார். மாநில குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன், மாநில வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்தப் பொதுவான புத்தொழில் முயற்சி மையம், பருப்பு வகைகள் பதனம் செய்தல், காய்கள் மற்றும் பழங்கள் பதனம் செய்தல் ஆகியவற்றுக்காக அமைக்கப்பட்டுள்ளது. சிறு தானியங்கள் குறித்த கையேடு ஒன்றும் வெளியிடப்பட்டது. கண்காட்சியில், 150க்கும் அதிகமான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. சிறுதானியங்கள் அடிப்படையிலான உற்பத்தி பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.