ராகுலை பற்றி அனைவருக்கும் தெரியும்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இங்கிலாந்தில் அவர் பேசும்போது, பாரதத்தில் ஜனநாயக ரீதியில் போட்டியிடும் இயல்பு முற்றிலும் மாறி விட்டது. அதற்கான காரணம் ஆர்.எஸ்.எஸ். என்ற ஒரேயொரு அமைப்புதான். அடிப்படைவாத, பாசிச கொள்கையுடைய ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அனைத்து பாரத அமைப்புகளையும் தனது பிடிக்குள் வைத்துள்ளது. பாரதத்தில் பத்திரிகை துறை, நீதிமன்றம், நாடாளுமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் என அனைத்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றன. அவை அனைத்தும் ஏதோ ஒருவகையில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு எதிர்க்கட்சி தலைவரிடமும் அரசு அமைப்புகள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்று நீங்களே கேட்டு பாருங்கள். என்னுடைய அலைபேசியில் பெகாசஸ் உளவு மென்பொருள் உள்ளது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, இதெல்லாம் நடக்கவில்லை” என குற்றம் சாட்டினார். அவரது பேச்சுக்கு பா.ஜ.க தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ராகுலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “காங்கிரஸ் கட்சியில், தன்னை இளவரசராக அறிவித்துக் கொண்டுள்ள ராகுல் காந்தி, அனைத்து எல்லைகளையும் மீறி விட்டார். தேசத்தின் ஒற்றுமைக்கு தீவிர ஆபத்து நிறைந்த மனிதராக அவர் மாறியுள்ளார். அவர் தற்போது, பாரதத்தை பிரிக்க, மக்களை தூண்டி விடும் வேலையை செய்து வருகிறார். பாரதத்தின் பிரபலம் வாய்ந்த, மக்களால் அன்பு செலுத்தப்படுகிற, மதிப்பு மிக்க பிரதமர் மோடியின் ஒரே மந்திரம் ‘ஒரே பாரதம், வளர்ச்சிக்கான பாரதம்’ என்பதே என கூறியுள்ளார். மற்றொரு பதிவில், “ராகுல் காந்தி ஒரு ‘பப்பு’ என்பது பாரதத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், வெளிநாட்டினருக்கு அது தெரியாது. அதனுடன், அவரது முட்டாள்தன பேச்சுகளுக்கு எதிர்வினையாற்ற வேண்டும் என்பதும் அவசியமில்லை. ஆனால் சிக்கல் என்னவென்றால், அவரது பாரத எதிர்ப்பு பேச்சுகள், பாரதத்தின் மீதுள்ள பொதுவான எண்ணத்திற்கு களங்கம் உண்டாக்கும் வகையில் உள்ளது. பாரதத்துக்கு எதிரான சக்திகளால் அது தவறாக பயன்படுத்தப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.