மக்களுக்கு உதவும் கதிசக்தி திட்டம்

பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம் மற்றும் தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கை இரண்டும், வணிகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பெருமளவு உதவும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். டெல்லியில் இந்திய வர்த்தக சபையில் நடைபெற்ற விரைவு சக்தி பெருந்திட்டம் தொடர்பான தேசிய கருத்தரங்கில் உரையாற்றிய அவர், “விரைவு சக்தி பெருந்திட்டமும் சரக்குப் போக்குவரத்துக் கொள்கையும் நாட்டில் முதலீடுகளை அதிகரித்துப் போட்டித் தன்மையை மேம்படுத்தும். புதுமைக் கண்டுபிடிப்புகளில் முன்னணி நாடாக பாரதத்தை உலகம் அங்கீகரித்துள்ளது. சிறந்த நிர்வாகம், மக்களின் வாழ்க்கையை எளிமைப்படுத்துதல், வர்த்தகம் புரிதலை எளிமைப்படுத்துதல் போன்றவற்றிற்காக புதிய நடைமுறைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யு.பி.ஐ டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை திட்டம் பாரதத்தின் தொழில்நுட்ப வல்லமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. இது நாட்டின் பொருளாதாரத்தில் மிகச் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 7.28 பில்லியன் என்ற எண்ணிக்கையில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டத்தில் 1,300 தகவல் அடுக்குகள் உள்ளன. காடுகள், வனவிலங்கு சரணாலயங்கள், நதிகள், யுனெஸ்கோ பாரம்பரிய இடங்கள் உள்ளிட்டவையும் இதில் அடங்கும். பிரதமரின் விரைவு சக்தி திட்டம் பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட சமூக உள்கட்டமைப்பு அமைப்புகள் தொடர்பான நடவடிக்கைகளைத் திட்டமிடவும் உதவுகிறது. 12 மாநிலங்கள், நில ஆவணத் தகவல்களை டிஜிட்டல் மயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். சரக்குப் போக்குவரத்துக்கான கட்டணங்கள் குறைவாக இருக்க வேண்டும். வளர்ந்த பாரதத்துக்கான இலக்குகளை அடைய இது முக்கியமானது. பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம் சரக்குப் போக்குவரத்து செலவுகளை பெருமளவு குறைக்கும். கல்வி, சுகாதாரம், உணவு, இருப்பிடம் அனைத்தும் மக்களுக்குத் தரமான முறையில் கிடைக்க அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது பாரதத்தை உலக நாடுகள் உற்று நோக்குகின்றன. உலகளாவிய சிக்கல்களுக்கும், சவால்களுக்கும் தீர்வை ஏற்படுத்தும் தன்மையுடன் பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார்” என தெரிவித்தார்.