பாரிசு கன்னட திம் திமாவா

டெல்லியில் உள்ள தல்கதோரா ஸ்டேடியத்தில் ‘பாரிசு கன்னட திம் திமாவா’ கலாச்சார விழாவை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்து, கண்காட்சியைப் பார்வையிட்டார். விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் கீழ் நடைபெறும் இந்த விழா கர்நாடகாவின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்றைக் கொண்டாடுகிறது. கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், “டெல்லி கர்நாடக சங்கம் புகழ்பெற்ற பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்கிறது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன அமிர்தப் பெருவிழாவை நாடு கொண்டாடும் நேரத்தில், டெல்லி கர்நாடக சங்கத்தின் 75வது ஆண்டு விழா நடைபெறுகிறது. கர்நாடகத்தின் பங்களிப்பு இல்லாமல் பாரதத்தின் அடையாளம், பாரம்பரியங்கள் மற்றும் உத்வேகங்களை வரையறுக்க முடியாது” என்றார். புராண காலத்தில் அனுமனின் பாத்திரத்திற்கு ஒப்பானதை குறிப்பிட்ட பிரதமர், பாரதத்துக்கு கர்நாடகம் இதேபோன்ற பங்கை ஆற்றியுள்ளது. மேலும் சகாப்தத்தை மாற்றும் பணி அயோத்தியில் தொடங்கி ராமேஸ்வரத்தில் முடிவடைந்தாலும், அது கர்நாடகாவில் இருந்துதான் அதன் முழு வலிமையைப் பெற்றது” என்று கூறினார்.

முகலாய படையெடுப்பாளர்கள் நாட்டை நாசம் செய்து, சோமநாத் போன்ற சிவலிங்கங்களை அழித்த இடைக்காலத்தையும் பிரதமர் குறிப்பிட்டார். “தேவர தாசிமையா, மதரா சென்னையா, தோஹரா காக்கையா, பகவான் பசவேஸ்வரா போன்ற துறவிகள் தான், மக்களை தங்கள் நம்பிக்கையுடன் இணைத்தவர்கள். அதேபோல, ராணி அப்பாக்கா, ஒனகே ஓபவ்வா, ராணி சென்னம்மா, கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா போன்ற வீராங்கனைகள், அந்நிய சக்திகளை எதிர்கொண்டனர். சுதந்திரத்திற்குப் பிறகு, கர்நாடகத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் பாரதத்தைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றனர். ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற முழக்கத்தின் எடுத்துக்காட்டாக கர்நாடக மக்கள் வாழ்கின்றனர். ‘ஜி20’ போன்ற உலகளாவிய அமைப்புக்கு பாரதம் தலைமை வகிக்கும் போது, ஜனநாயகத்தின்லட்சியங்களால் தேசம் வழிநடத்தப்படுகிறது. கர்நாடகம் பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பத்தின் பூமி. இது வரலாற்று கலாச்சாரத்தையும் நவீன செயற்கை நுண்ணறிவையும் கொண்டுள்ளது. நாடு வளர்ச்சி, பாரம்பரியம், முன்னேற்றம் ஆகியவற்றுடன் ஒன்றாக முன்னேறி வருகிறது. ஒருபுறம், பாரதம் தனது பழங்கால கோயில்கள் மற்றும் கலாச்சார மையங்களை புத்துயிர் பெறுகிறது, மறுபுறம், டிஜிட்டல் பணம் செலுத்துவதில் உலக முன்னணியில் உள்ளது. இன்றைய பாஅரதம் தனது திருடப்பட்ட சிலைகள் மற்றும் பல நூற்றாண்டுகள் பழமையான கலைப்பொருட்களை வெளிநாடுகளில் இருந்து திரும்பக் கொண்டுவருகிறது. இது புதிய பாரதத்தின் வளர்ச்சிப் பாதையாகும், இது ஒரு வளர்ந்த தேசத்தின் இலக்கை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும்” என்று கூறினார்.