மாயமானவர்களைத் தேடி…

விழுப்புரம் மாவட்டம் குண்டலபுலியூரில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வந்த அன்பு ஜோதி அசிரியமம் என்ற பெயரில் கிறிஸ்தவர்கள் நடத்திய ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஜபருல்லா என்பவர் காணாமல் போனதாக புகார் எழுந்தது. புகாரையடுத்து கடந்த 10ம் தேதி காவலர்களும் அரசு அதிகாரிகளும் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையின் போது உரிய அனுமதியின்றி ஆசிரமம் நடத்தி வருவதும், ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அடித்து துன்புறுத்தியதும் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின் மற்றும் ஆசிரம பணியாளர்கள் சதீஷ், கோபிநாத், பிஜீ மேனன், உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கினை டி.ஜி.பி சைலேந்திர பாபு, சி.பி சி.ஐ.டிக்கு மாற்றி உத்தரவிட்டார். அந்த ஆசிரமத்தில் ஆய்வு செய்தபோது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கட்டப்பட்ட சங்கிலிகள், அடிக்க பயன்படுத்திய தடிகள் உள்ளிட்ட பொருட்களை காவல் அதிகாரிகள் கைப்பற்றினர். இதனிடையே, ஆசிரமத்தில் மாயமான 16 பேர் குறித்து சி.பி சி.ஐ.டி காவலர்கள் விசாரணை நடத்தினர். அப்போது, மாயமான 16 பேரும் கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே வேறு ஒரு ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனையடுத்து சி.பி சி.ஐ.டி ஏ.டி.எஸ்.பி கோமதி தலைமையிலான காவலர்கள் குழு, பெங்களூரு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.