சேவை நமது கலாச்சாரம்

சென்னையில், கில்ட் ஆஃப் சர்வீஸ் என்ற தொண்டு நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு பேசுகையில், “கில்ட் ஆஃப் சர்வீஸ் தொண்டு நிறுவனம் கல்வி, பெண்கள் முன்னேற்றம், குழந்தைகள் முன்னேற்றம், மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றம் எனப் பல தரப்பட்ட சேவைகளை வழங்கிவருகிறது. இந்நிறுவனம் இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்தச் சேவையை வழங்கும் என நம்புகிறேன். சமூகத்தில் புறக்கணிக்கப்படும் நபர்களுக்கு சேவை நிறுவனங்கள், சேவை செய்ய வேண்டும். குறிப்பாக சமூகத்தில் புறக்கணிக்கப்படும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். அவர்களுடைய முன்னேற்றத்திற்கு பங்காற்ற வேண்டும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள்கூட தொட்டு சிகிச்சையளிக்க மறுப்பதை நான் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு நாம் உதவ வேண்டும்.

நாம்தான் அதற்குச் சான்று: சேவை என்பது ஆயிரம் ஆண்டு பழைமையான நமது கலாசாரத்தில் ஊறிப்போன ஒன்று. நாம் நமக்காக மட்டுமல்ல பிறருக்காகவும் வாழ வேண்டும் என்பதை நம் மூதாதையர்கள் கற்றுத் தந்துள்ளனர். அந்தப் பண்பு நம் டி.என்.ஏவில் கலந்துள்ளது. இந்த நாகரிக சமூகக் குடும்பத்தைத்தான் நாம் ‘பாரத்’ என்று அழைக்கிறோம். வரும் 2047ல் நாம் நமது 100வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகையில் உலகில் நற்குணங்களில் தலைசிறந்து விளங்கும் நாடாக நாம் திகழ வேண்டும். பாரதம் உலகிலேயே தலைசிறந்து விளங்கும்போது, உலகமே அதை மிகவும் செளகரியமாக உணரும். நாம்தான் அதற்குச் சான்று. ஐரோப்பிய நாடுகள் உலகிலேயே வலிமையாக இருந்தபோது, அது காலனியாதிக்கத்துக்குத்தான் வழிவகுத்தது. மிகப் பெரிய அளவில் சுரண்டல்கள் நடந்தன. அமெரிக்காவும், சோவித் ரஷ்யாவும் வலிமையானபோது, இரு நாடுகளும் ஜனநாயகத்தின் பெயராலும் பொதுவுடைமை சிந்தாந்தத்தின் பெயராலும் தங்கள் கொள்கைகளில் வேறுபட்டு, எண்ணற்ற மக்களுக்கு துயரத்தை மட்டுமே கொடுக்கின்றன.

தெற்கின் குரல் பாரதம்: சீனா சமீபகாலமாக வலிமையடைந்து வருவது எத்தகைய பாதிப்புகளை உருவாக்கி வருகிறது என்பதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். இலங்கை அதற்கு ஒரு உதாரணம். நான் பாகிஸ்தான் பற்றி பேசவில்லை. ஆனால், பாரதம் உலக அரங்கில் வலிமை அடையும்போது இவ்வாறெல்லாம் கண்டிப்பாக நடக்காது. கொரோனாவின்போது என்ன நடந்தது? உலகமே செய்வதறியாது திகைத்தபோது, நமது நாடு தடுப்பூசிகளை உருவாக்கியது. பல நாடுகள் தாங்கள் உருவாக்கிய தடுப்பூசிகளின் விலையை ஏற்றிக்கொண்டிருந்தபோது, நாம் சுமார் 150 நாடுகளுக்கு தடுப்பூசிகளை அளீத்துள்ளோம். நம்முடைய தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் திணறியபோதும் நாம் அதைச் செய்தோம். இதுதான் பாரதம். உலகில் 3ல் 2 பங்கு நாடுகள் குரலற்றவையாக இருக்கின்றன. அவை அனைத்தும் பாரதம் தங்கள் குரலாக எதிரொலிக்கும் என்று நம்புகின்றன.

அதிகரித்துவிட்ட ஜாதிகள்: தற்போதைய உலகின் இக்கட்டான சூழலிலும் பாரதத்தின் வளர்ந்து வரும் பொருளாதாரம் அனைத்து நாடுகளையும் உற்றுநோக்க வைத்துள்ளது. பாரதம் தான் உலகின் நம்பிக்கை. நாம் இந்த நாட்டைப் பிளவுபடுத்தி, துண்டுகளாக, பார்க்கவில்லை. ஒரே குடும்பமாகப் பார்க்கிறோம். காலனியாதிக்கவாதிகள்தான் நம் நாட்டை பிரித்தார்கள். 1951ல் இருந்ததைவிட இப்போது ஜாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருமடங்காகிவிட்டது. பழங்குடிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. புது, புது அடையாளங்களுடன் வருவோரின் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது. சமூகம் பிரிக்கப்படுகிறது. நாம் அடுத்தவர்களின் கண்களாகச் செயல்படும்போதுதான் இத்தகைய பிரிவுகள் உருவாகின்றன. ஆனால், நாம் நம்முடைய கண்களால் பார்த்தோமானால் நாம் அனைவரும் ஒரு குடும்பமாகத்தான் இருக்கிறோம். இருக்க வேண்டும். இங்கே ஏற்றத்தாழ்வுகளுக்கு இடமில்லை. இங்கே இருக்கும் பிரச்னைகளை ஒரு குடும்பத்தின் பிரச்னையாகத்தான் கருதி தீர்க்க வேண்டுமே தவிர, பிரிக்கக் கூடாது” என கூறினார்.