சர்வதேச விருதை வென்ற புதுச்சேரிமாணவி

புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத்சிங், சர்வதேச விருதான பிரிட்டிஷ் கவுன்சிலின் மதிப்புமிக்க மகளிர் அறிவியல் ஃபெல்லோஷிப்பை வென்ற புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவியான முனைவர் தபஸ்ஸும் அப்பாஸிக்கு பாராட்டுகளையும் ஆசிகளையம் வழங்கினார். உலக தரவரிசை பட்டியலில் உயர்ந்த இடத்தில் உள்ள (2023QS உலக மதிப்பீட்டின்படி 15வது இடத்தில் உள்ளது) எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் அவர் அதனைப் பெறவுள்ளார். மேலும்,அங்கு அவர் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடிய வகையில், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலை நிர்வகிப்பதில் செயற்கை நுண்ணறிவு நுட்பங்களைப் பயன்படுத்துவதில் பணியாற்றவுள்ளார். டாக்டர் தபஸ்ஸும் புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் எம்.டெக் பயில்கையில், அத்துறையில் முதலிடம் பெற்றதற்காக தங்கப் பதக்கம் வென்றதோடு, பின்னர் அதே பல்கலைக் கழகத்தில் தனது முனைவர் பட்டம் முடித்தார். தான் ஆரம்பித்த புதுமையான ஆராய்ச்சி முயற்சியினை எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் மேலும் விரிவாக மேற்கொள்ளவுள்ளார். அவரது Ph.D பணியிலிருந்து எழும் வெளியீடுகள், ஏற்கனவே உலகம் முழுவதிலுமிருந்து 1,200 மேற்கோள்களைப் பெற்றுள்ளது. இது அவரை உலகளாவிய அறிவியல் துறையில் வளர்ந்து வரும் நட்சத்திரமாகவும் உலகின் ஒட்டுமொத்த சிறந்த 12 சதவீத விஞ்ஞானிகளில் ஒருவராகவும் மாற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர் தபஸ்ஸும் கடந்த 4 ஆண்டுகளாக உதவிப் பேராசிரியராக டெஹ்ராடூனில் உள்ள யு.பி.இ.எஸ் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து வருகிறார்.