ராணுவ வீரரை கொன்ற தி.மு.க கவுன்சிலர்

தி.மு.க. ஆட்சியில் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், கவுன்சிலர்கள், பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் என அக்கட்சியினரின் அட்டூழியங்கள், அடாவடிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. தி.மு.க தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் இதனை எல்லாம் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை என பொதுமக்கள் புகார் கூறிவருகின்றனர். இந்நிலையில் அதனை மெய்ப்பிக்கும் விதமாக மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், வேலம்பட்டி, எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த சின்னசாமி, என்பவர், நாகோஜனஹள்ளி பேரூராட்சி, ஒன்றாவது வார்டு கவுன்சிலராக உள்ளார். அதே பகுதியில் ராணுவ வீரர்களான பிரபாகரன் மற்றும் அவரது தம்பி பிரபு ஆகியோர் வசிக்கின்றனர். பிரபாகரன் கடந்த 8ம் தேதி அங்குள்ள குடிநீர் தொட்டிஅருகே துணி துவைத்துள்ளார். இதை சின்னசாமி கண்டித்ததால் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அன்று மாலை, பத்துக்கும் மேற்பட்ட குண்டர்களுடன் அங்கு சென்ற சின்னசாமி, பிரபாகரன், பிரபு ஆகியோரை கடுமையாகத் தாக்கினார். இதனால் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராணுவ வீரர் பிரபு சிகிச்சை பலனினின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில், நாகரசம்பட்டி காவலர்கள், கவுன்சிலர் மகன்களான ராஜபாண்டி, சென்னையில் காவலராக பணிபுரியும் குரு சூரியமூர்த்தி, குணநிதி, மணிகண்டன், மாதையன், வேடியப்பன் என ஆறு பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கவுன்சிலர் சின்னசாமி உட்பட ஐந்து பேரை தேடி வருகின்றனர்.இந்த கொடூர கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “ராணுவ வீரர்களுக்கு, தி.மு.கவினர் அராஜகத்தால், சொந்த ஊரிலேயே பாதுகாப்பில்லை. தங்கள் உயிரையும் துச்சமென கருதி எல்லையில் நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களையும், அவர்கள் குடும்பத்தினரை மிரட்டுவதும், அவர்கள் மேல் தாக்குதல் நடத்துவதும், தற்போது கொலையே செய்யும் அளவுக்கு, தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் உருமாறியுள்ளது. காவல்துறையை கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர், சட்டம் ஒழுங்கு எப்படி போனால் எனக்கென்ன என்றுஇருப்பதை, பொதுமக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உடனடியாக கொலையாளிகள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கவும். மேலும் இது போன்ற சமூக விரோதச் செயல்கள் நடக்காமல் தடுக்க வேண்டுமென, தமிழக பா.ஜ.க சார்பில் வலியுறுத்துகிறேன்” என கூறியுள்ளார்.