பூச்சாண்டி காட்டும் பயங்கரவாதிகள்

ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட கனிமவள ஆய்வில், ரைசி மாவட்டத்தில் சலால் ஹைமனா பகுதியில் லித்தியம் தனிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு சுமார் 5.9 மில்லியன் டன் லித்தியம் கனிமம் அந்த பகுதியில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. லித்தியம் கனிமம் மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள் உட்பட அலைபேசி, லேப்டாப், உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு பயன்படுத்தப்படும் பேட்டரியின் முக்கிய மூலப்பொருள் லித்தியம். தற்போது லித்தியத்தை 100 சதவிகிதம் இறக்குமதி செய்யும் பாரதம், காஷ்மீரில் லித்தியம் கனிமம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதையடுத்து வருங்காலத்தில் இறக்குமதியை குறைத்து தன்னிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், காஷ்மீரில் செயல்படும் தடை செய்யப்பட்ட ‘மக்களின் பாசிச எதிர்ப்பு முன்னணி’ என்ற முஸ்லிம் பயங்கரவாத அமைப்பு, மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், எந்த சூழ்நிலையிலும் ஜம்மு காஷ்மீரின் வளங்களை திருட, சுரண்ட விடமாட்டோம். இந்த வளங்கள் மக்களுக்கு சொந்தமானது. அது ஜம்மு காஷ்மீர் மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். மோசமான ஹிந்துத்துவ திருடர்கள் எங்கள் வளங்களை திருட அனுமதிக்க மாட்டோம். ஜம்மு காஷ்மீருக்கு நுழைய நினைக்கும் பாரத நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம். ஜம்மு காஷ்மீரில் மட்டுமின்றி பாரதத்துக்குள்ளும் தாக்குதல் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் காவல்துறை இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.