குஷ்பு விமர்சனம்

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பின்புறம் பல்வேறு கடைகள் மற்றும் வழக்கறிஞர்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. அப்பகுதிக்கு வந்த இரு இளைஞர்கள் மீது ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரி தாக்கி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். அப்போது மர்ம கும்பல் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிர் இழந்தார். மற்றொருவர் ரத்த காயங்களோடு தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவத்தின் போது கொலை செய்த கொலையாளிகள், எவ்வித பதட்டமும் இன்றி சர்வசாதாரணமாக நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் தொடர்பாக பா.ஜ.க தலைவர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் பா.ஜ.க நிர்வாகி குஷ்பு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கோவை நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கற்ற நிலை உள்ளது. யாராவது முதல்வர் ஸ்டாலினை எழுப்பி உண்மையான படத்தைக் காட்ட முடியுமா? நீண்ட நாட்களாக உறக்கத்தில் இருந்துள்ளார்” என விமர்சித்துள்ளார்.