பொதுமக்களை தாக்கும் தி.மு.க. கவுன்சிலர்

கோவை மாவட்டம் கொண்டையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமி கார்டன் பகுதியில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் 6.31 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை அப்பகுதியைச் சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் மோகன், கான்ட்ராக்ட் எடுத்து செய்திருப்பதாக கூறப்படுகிறது. வழக்கமாக தி.மு.க.வினர் அமைக்கும் சாலைகள் போலவே இந்த சாலையும் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், லட்சுமி கார்டன் பகுதியில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம், தி.மு.க.வைச் சேர்ந்த 9வது வார்டு கவுன்சிலர் மோகன் தலைமையில் நடைபெற்றது. அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார், கார்த்திக், ஜீவா உள்ளிட்டோர் தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலை குறித்து கேள்வி எழுப்பினர். பொதுமக்களும் அவர்களுக்கு ஆதரவாக பேசினர். இதனால் கவுன்சிலர் மோகன் தரப்பைச் சேர்ந்தவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், கேள்வி எழுப்பிய பொதுமக்களை தி.மு.க. கவுன்சிலர் மோகன் சரமாரியாக தாக்கத் தொடங்கினார். இந்த தாக்குதலில் கேள்வி எழுப்பிய ரவிக்குமார், கார்த்திக், ஜீவா ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்ததையடுத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தரமற்ற முறையில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது, அது குறித்து கேள்வி எழுப்பிய பொதுமக்களை, தி.மு.க. கவுன்சிலர் தாக்கிய சம்பவமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.