தி.மு.கவிற்கு பயம்

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பை பாரதம் ஏற்றுள்ள நிலையில், பிரதமர் மோடியின் உயரிய எண்ணமான “ஒரே பூமி, ஒரு குடும்பம், ஒரே எதிர்காலம்” என்ற நோக்கத்தைப் பெருமைப்படுத்தும் விதமாக, பா.ஜ.கவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் சார்பாக, “ஸ்வாசம்” திட்டத்தின் மூலம் 10 லட்சம் மரக்கன்றுகளை நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 13வது சட்ட திருத்தம் விவகாரம் தொடர்பாக இன்று இலங்கை பயணம் மேற்கொள்கிறேன். ஈரோடு கிழக்கு வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க அழைப்பு விடுத்துள்ளது. நான் இலங்கை செல்வதால் பா.ஜ.கவின் மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார். மத்தியில் பா.ஜ.க அரசு வந்த பிறகு மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு வெகுவாகக் குறைந்துள்ளது. வெகு விரைவில் பாரதம் இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கும். ஈரோடு கிழக்குத் தொகுதியில் அ.தி.மு.க வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம். கே.எஸ் தென்னரசுவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். நானும் பிரச்சாரம் செய்வேன். அவரை வெற்றி பெற வைக்க வேண்டியது நமது கடமை. அ.தி.மு.க வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெறுவார். திமு..க கூட்டணி வேட்பாளருக்காக முதல்வர் 2 நாட்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இடைத் தேர்தலுக்கு முதல்வர் உட்பட பல அமைச்சர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். ஆளும் கட்சி பயந்துள்ளது, முதல்வர் பயந்துள்ளார். அதனால் தான் இவ்வளவு அமைச்சர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். ஒரு ஆளும் கட்சி இந்த அளவுக்கு இடைத்தேர்தலை பயத்துடன் எதிர்கொண்டதாக சரித்திரம் இல்லை. தி.மு.கவிற்கு பயம் வந்துவிட்டது” என கூறினார்.