பிரதமரின் கருத்து

மக்களவையில் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது குறித்து கருத்துத் தெரிவித்த பிரதமர் மோடி, “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட், வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட். அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது. விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் என அனைத்துத் தரப்பினரும் இதனால் பயனடைவர். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. இந்த பட்ஜெட்டில் உலகின் மிகப்பெரிய உணவு சேமிப்பு திட்டம் இடம்பெற்றுள்ளது. மகளிர், குழந்தைகளுக்கான பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுவதன் மூலம் அவர்கள் சுயமுன்னேற்றம் அடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக ‘விஸ்வகர்மா’ பயிற்சி மற்றும் ஆதரவு தொடர்பான திட்டம் பட்ஜெட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் தொழில்நுட்பம் மற்றும் புதிய பொருளாதாரத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நடுத்தர வர்க்கத்தினரை மேம்படுத்தவும், வாழ்க்கையை எளிதாக்கவும் மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நாங்கள் வரி விகிதத்தை குறைத்து அதற்கேற்ப நிவாரணம் வழங்கி உள்ளோம் என கூறினார்.