அதானி நிறுவனத்தில் நம்பிக்கை

அதானி நிறுவனத்தில் ஐ.ஹெச்.சி முதலீடு: அபுதாபியைச் சேர்ந்த பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு சர்வதேச ஹோல்டிங் நிறுவனம் (ஐ.ஹெச்.சி) நிறுவனம் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் ஃபாலோ ஆன் பங்கு வழங்கலில் (எப்.பி.ஓ) ரூ.3,115 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதனை தனது துணை நிறுவனமான கிரீன் டிரான்ஸ்மிஷன் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங் லிமிடெட் மூலம் முதலீடு செய்யும் என்று அந்த நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், “அதானி குழுமத்தின் மீதான எங்கள் ஆர்வம், அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் அடிப்படைகள் மீதான எங்களது நம்பிக்கையால் உந்தப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. நீண்ட காலக் கண்ணோட்டத்தில், வளர்ச்சிக்கான வலுவான சாத்தியத்தை நாங்கள் இதில் காண்கிறோம்” என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சையத் பாசார் ஷுப், தெரிவித்துள்ளார். அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் உள்ளிட்ட பாரத நிறுவனங்களின் பசுமையை மையமாகக் கொண்ட மூன்று நிறுவனங்களில் கடந்த ஆண்டு 2 பில்லியன் டாலர்கள் முதலீட்டை செய்திருந்த இந்த நிறுவனம் தற்போது அதானி குழுமத்துடன் மேற்கொண்டுள்ள இரண்டாவது முதலீட்டு ஒப்பந்தம் இதுவாகும்.

ஹைஃபா துறைமுகத்தை கையகப்படுத்திய அதானி: இஸ்ரேல் நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான ஹைஃபா துறைமுகத்தை அதானி நிறுவனம் வெற்றிகரமாக கையகப்படுத்தியுள்ளது. பாரதத்தை சேர்ந்த அதானி குழுமத்தின் தலைமையிலான கூட்டமைப்பு, வடக்கு இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகத்தை 4 பில்லியன் ஷேக்கல்களுக்கு (1.15 பில்லியன் டாலர்) கையகப்படுத்தியுள்ளதாக இஸ்ரேலின் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு நடைபெறும் விழாவில் அதானி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான கௌதம் அதானியுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் கலந்து கொள்கிறார். ஹைஃபா இஸ்ரேலின் இரண்டாவது பெரிய துறைமுகம் மற்றும் நாட்டின் மத்திய தரைக்கடல் கடற்கரையில் ஒரு முக்கிய வர்த்தக மையமாக செயல்படுகிறது. இந்த நகரம் இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும் தொழில்துறை மையம் மற்றும் மத்தியதரைக் கடலில் ஒரு முக்கிய ரயில் மையமாகும். தொழிலாளர் வேலை நிறுத்தங்களால் பல ஆண்டுகளாகப் போராடி வரும் தொழிற்துறையின் ஏறக்குறைய 20 ஆண்டு கால மறுசீரமைப்பு, ஐந்தாண்டு செயல்முறைக்குப் பிறகு இஸ்ரேலின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றின் விற்பனை நடைபெற்றுள்ளது.