நடவடிக்கை கோரும் பாரதம்

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள இரண்டு ஹிந்துக் கோயில்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து நாசப்படுத்தியதை பாரதம் கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆஸிதிரேலிய அரசை வலியுறுத்தியுள்ளது. முன்னதாக, மெல்போர்னின் மில் பூங்காவில் உள்ள பி.ஏ.பி.எஸ் சுவாமிநாராயண் கோயில் சுவர்களில் கடந்த ஜனவரி 12 அன்று காலிஸ்தான் பிரிவினைவாதிகள், பாரத எதிர்ப்பு மற்றும் காலிஸ்தான் சார்பு கிராஃபிட்டிகளை எழுதி சேதப்படுத்தினர். பின்னர், ஜனவரி 16 அன்று, மெல்போர்னின் கேரம் டவுன்ஸில் உள்ள புகழ்பெற்ற மற்றொரு ஹிந்துக் கோயிலான ஸ்ரீ சிவா விஷ்ணு கோயில் சுவர்களிலும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் ஹிந்து எதிர்ப்பு, பாரத எதிர்ப்பு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான கிராஃபிட்டி வாசகங்களை எழுதி நாசப்படுத்தினர். இதுகுறித்து பேசிய மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, “ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் இரண்டு கோயில்களை சேதப்படுத்தப்பட்டதை நாங்கள் அறிவோம். இந்த சம்பவங்களை நாங்கள் கண்டிக்கிறோம். இந்த செயல்களை ஆஸ்திரேலிய தலைவர்கள், சமூக தலைவர்கள் மற்றும் மத நிறுவனங்களும் பகிரங்கமாக கண்டித்துள்ளனர். மெல்போர்னில் உள்ள எங்கள் துணைத் தூதரகம் உள்ளூர் காவல்துறையிடம் இந்த விஷயத்தை எடுத்துச்சென்றது. விரைவான விசாரணை, குற்றவாளிகள் மீது நடவடிக்கை மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த விவகாரம் ஆஸ்திரேலிய அரசின் கவனத்துக்கும் தூதரகம் வாயிலாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. நாங்கள் விரைவான நடவடிக்கையை எதிர்நோக்குகிறோம்” என தெரிவித்தார்.