பாரதத்தால் மட்டுமே மீண்டோம்

இலங்கை சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசினார். பிறகு ஜெய்சங்கரும், அலி சப்ரியும் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர். அதில் பேசிய அலி சப்ரி, ”இலங்கைமிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துக் கொண்டுள்ளது. எனினும் தற்போது இந்த நெருக்கடியில் இருந்து நாங்கள் ஓரளவு மீண்டுள்ளோம். இதற்கு மிக முக்கிய காரணம் பாரத அரசின் உதவிதான். இது மிகைப்படுத்தும் வார்த்தை அல்ல. அத்தியாவசியப் பொருட்கள், மனிதாபிமான உதவிகள் என பல்வேறு வகைகளில் சுமார் 4 பில்லியன் டாலர்கள் அளவுக்கு பாரதம் இலங்கைக்கு உதவியது. இந்த உதவிதான் இலங்கை தற்போது ஓரளவு மீண்டதற்கு மிக முக்கிய காரணம். சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் அளிக்கவும் பாரதம் அளித்த உத்தரவாத தான் காரணம். யாரும் எங்களுக்கு உத்தரவாதம் அளிக்க முன்வராத நிலையில், பாரதம் தான் முதன்முதலாக இலங்கைக்கு உத்தரவாதம் அளித்தது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாரத அரசுக்கும் அதன் மக்களுக்கும் இலங்கை அதிபர் சார்பிலும் இலங்கை மக்கள் சார்பிலும் மனதார நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறினார். பிறகு பேசிய ஜெய்சங்கர், ”பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டுவர எவ்வாறு எல்லாம் உதவ முடியுமோ அதை எல்லாம் பாரதம் சற்றும் தாமதிக்காமல் உடனடியாகச் செய்தது. இலங்கைக்கு உதவும் மற்ற நாடுகளின் நிலைப்பாடு என்ன என்பதை அறிந்துகொள்வதற்காக நாங்கள் காத்திருக்கவில்லை. இலங்கைக்கு கடன் அளிக்கும் விவகாரத்தில், சர்வதேச அமைப்புகள் தயக்கமின்றி கடனுதவி அளித்து இலங்கையின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று பாரதம் விரும்புகிறது” என தெரிவித்தார்.